உனக்கென்று ஓர்வார்த்தை
உதட்டோரம் ஒளிஞ்சிருக்கு!
ஒப்புக்கு நீ கூறும்
ஓராயிரம் காரணங்கள்!
இமைப்பொழுதில் ஓடிவந்து
இன்னுயிர் காக்காது!!
கரைமீறத் துடிக்கும்
அலையற்ற குளத்தில்
கெண்டை மீனுக்காய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
வெள்ளைச் சாமியார்
கொக்கை அறிவேன்!!
ஒருகால் உள்ளிருக்க
மறுகால் காற்றில் அலைபாய!
கொக்கை அடுத்த
ஒற்றைக்கால் பிறவியை!
உருவின் மாற்றத்தால்
உன்னில்தான் கண்டேனே!!
பேருந்து வந்ததும்
பேரின்பம் கொண்டாயே!
போகும் இடத்துக்கு
போய்ச்சேரும் எண்ணத்தால்
பேருந்துள் கால்பதித்தாய்
புறப்பட்ட பின்னரே!!
படிக்கட்டு பக்கத்தில்
பாதங்கள் நெருங்கியதும்
பாழும் மனத்தினிலே
பதமற்ற ஆசைகள்
பாய்ந்தோடி வந்தது
படிக்கட்டில் பயணிக்க!!
பேருந்து வசதியில்
இன்றளவும் எண்ணிக்கையில்
தரம்தாழ்ந்த கிராமத்தில்
வழியேதும் இல்லையே
விரைந்தோடி வருவதற்கு
படிக்கட்டுப் பயணமே!!
வரிசையாய் வாகனங்கள்
சாரையாய் ஊர்வதுபோல்!
நகரத்து சாலைகளில்
பலவாக பேருந்து
பாங்காக வந்தாலும் - அங்கும்
படிக்கட்டுப் பயணமே!!
நாகரீகம் கற்கும் முன்
நினைத்ததைத் தின்று!
உடுக்கும் உடையது
இல்லாது போயிடினும்!
உணவின் நிமித்தமாய்
கிளைகளில் தொங்கினாய்!!
பகுத்தறிவில் கோலேச்சு
கோபுரங்கள் மேலேறி
வெற்றிக்கொடி நாட்டினாலும்!
மரத்திற்கு மரம்
தாவித் திரியும் !
குணமிங்கு போகலியே!!
படிக்கும் பருவத்தில்
பவுசு ஏனிங்கே!
சாகசம் காட்டுவதால் - நீ
கதையின் நாயகனோ?
யாரை வசீகரிக்க - இந்த
பகல்வேடம் உனக்கு!!
மதியெங்கே போயிற்று
அடகு வைத்தாயோ!
நிறைந்து போனதென்று
ஒதுக்கி வைத்தாயோ!
சிரத்தினுள் இருப்பதென்ன
சிந்தித்து பார்த்திவிடு!!
உயிரின் விலையதை
உள்ளூன்றி நோக்கிவிடு!
உறுப்புகள் தொலைந்தால்
வெறுப்புகள் தான் மிஞ்சும்!
முழுதாய் இருந்தால்தான்
எளிதாய் கரையேறலாம்!!
கொஞ்சம் பொறுத்திருந்து
போனால் என்ன - உன்
மதிப்புகள் போய்விடுமா?
வேண்டாத செய்கையால்
வாழ்வை தொலைக்காதே!
வாழ்க்கை வாழ்வதற்கே!!
அன்பன்
மகேந்திரன்