மலரினின்று உறிஞ்சிய
மது உண்ட மயக்கத்தில்!
ரீங்கார இசையோடு
சிறுவட்டமிட்டு சுற்றிவரும்
சில்வண்டு பூச்சிகள் யாம்!!
எலும்பொடு சதைகளை
பின்னிப் பிணைத்து!
நரம்பு நதிகளை
தோல் கொண்டு சுற்றிய
உடலின் உணர்ச்சியல்ல யாம்!!
உள்ளங்கை அளவே
உருப்பெற்று இருந்தாலும்!
ஓயாத உழைப்பினால்
உயிர்சுமந்து நிற்கும்
இதயத்தின் உணர்ச்சி யாம்!!
இன்று பிறந்து இன்றே அழியும்
விட்டில் பூச்சல்ல
முன்னிலை படர்க்கையும்
புன்சிரிப்பால் அகமகிழும்
ஈதலின் இன்னுருவே யாம்!!
துரத்தும் துயரங்களின்
இடுக்கிப் பிடியில்!
துன்புறும் உள்ளங்களை
பொன்முறுவல் பூத்திட
விழையும் வினையூக்கி யாம்!!
யாம் இங்கே யாரென்ற
வினாக்களை கேட்கின்றேன்?
எமையிங்கே பன்மையாய்
ஏற்றத்தோடு விளம்பி நிற்கும்
யாமோ அன்பு எனும் பண்பே!!
அகிலத்தின் புறப்பரப்பில்
மானுடப் பெருங்குலத்தோர்!
மாட்சிமை குணத்தோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவதோ
அன்பெனும் எம்மாலே!!
திரிசடையோன் சிவனுக்கு
புரி இணையாய் எமையிங்கே!
தருவித்து அழகாய்
மந்திரம் சொன்னதோர்
புலவன் வாழ்ந்ததும் இங்கன்றோ!!
அனைத்தினையும் பூட்டி
பாதுகாக்க தாழுண்டு!
எமையிங்கு பூட்டி
அடைத்திட ஓர் தாழில்லை என
உரைத்ததும் இங்கன்றோ!!
மெல்லிய பொருளுக்கு
உவமைக் கருவாய்
மலரதனை சொல்வதுண்டு!
இப்புவியில் எம்குணமோ
மலரினும் மெல்லியதாய்!!
மெல்லிய தன்மையாம்
எமைக்கருவில் ஏற்றிடுக!
புவனத்தின் கறையெல்லாம்
எமைக்கொண்டு கழுவிடுக!
பண்புள்ள மானுடராய்
அகிலத்தில் சிறந்திட
காரணியைக் கைகொள்வீர்!
தண்மையாம் அன்பெனும்
காரணியைக் கைகொள்வீர்!!
ஆதலின் ...........
இன்றே அன்பு செய்வீர்!!
அன்பன்
மகேந்திரன்