தத்தோம் தத்தோம்
தரிகிட தத்தோம் தத்தோம்!
வந்தோம் வந்தோம்
சேதி சொல்லவந்தோம்!!
அந்திசாயும் நேரமய்யா
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!
முந்திவந்து பாருங்கய்யா!
சந்தியிலே வந்துநின்னு
பந்திவிரிச்சு போட்டோமய்யா!!
அம்பலத்து பெரியோரே
வம்பளக்கும் சிறுவர்களே
எம்குலத்து மாந்தர்களே
நம்பிவந்து பாருங்கய்யா!!
கொத்துகொத்தா பாவைகள
சித்திரமா ஆட்டியிங்கே
சத்தாக கதைசொல்லி
கூத்துகாட்ட வந்திருக்கோம்!!
சுதிப்பெட்டி கொண்டுவந்தோம்
மதிமயக்கும் இசைகொடுக்க
முகவீணை தாங்கிவந்தோம்
சகலோரை மயக்கிடவே!!
தந்தன தாளம்போட்டு
சிந்தையை மயக்கவே
பாந்தமாய் மிருதங்கம்
மந்தைக்கு கொண்டுவந்தோம்!!
மரத்தால் செய்துவந்த
மொரத்த பொம்மைகளை
சிரத்தில் ஏற்றிவைத்த
பருத்த செய்திசொல்ல
கரத்தால் ஆட்டிவந்தோம்!
கழித்த துணிகொண்டு
செழித்த உடலமைத்து
பழித்தோம் தீமைகளை
நூலிழை கைகொண்டு!!
தோல்பாவை கையெடுத்து
தொலைநோக்கு கண்ணோடு
தொய்ந்துபோன நற்குணத்தை
தோய்த்து எடுத்திடவே
மாய்ந்து ஆட்டிவந்தோம்!!
தஞ்சை வளநாட்டு
சஞ்சாரக் கூத்தர் நாமோ
கொஞ்சம் சேதிசொல்ல
நெஞ்சில் உரத்தோடு
தஞ்சமென நாடிவந்தோம்!!
எம்கலைதான் உலகத்திலே
எல்லோருக்கும் முன்னோடி
எடுப்பான நாடகத்தின்
துடுப்பான நடிப்பெல்லாம்
மடிப்பு கலையாம
கொடுத்ததெல்லாம் நாம்தானே!!
அகவல் ஏதுமின்றி
சகலரை சேர்ந்திடவே
தகவல் தொடர்புக்கென்றே
முகவரி கொடுத்திங்கே
ஆகமம் செய்ததெல்லாம்
மகத்தான பாவைக்கூத்தே!!
குமரியில் ஆரம்பித்து
இமயம் வரையிலும்
கோமள பாவைவைத்து
கூத்துகட்டி திரும்புகையில்
போகையிலே வித்திட்ட
செம்மாங்கன்று இப்போ
வளர்ந்து கனி கொடுத்ததய்யா!!
பன்னூறு ஆண்டுகள்
முன்னே பிறந்ததுவே
சொன்ன சேதியெல்லாம்
மேன்மறை போலிங்கே
மண்போற்றி நின்றதய்யா!!
கடகடன்னு ஒடுங்காலம்
மடமடன்னு போச்சுதய்யா!
படபடன்னு இருந்துவந்த
குடுகுடு பாவைக்கூத்து
சடசடன்னு அழிஞ்சுதய்யா!!
பல ஆண்டு கழித்தபின்னே
பாவைகள கையெடுத்தேன்!
பட்டினியா கிடந்துதானே
தலைநகரம் போகப்போறேன்!!
பல ஊர அழிச்சிடும்
பிற்காலம் ஒழிச்சிடும்
பகாசுர அணுவுலையை
பட்டுன்னு நிறுத்திடுன்னு
பாவைக்கூத்து செய்யப்போறேன்!!
உயிரற்ற பொம்மைகூட
உயிர்வந்து கதைபேசும்
உயிருள்ள உனக்கிங்கே
உற்றநிலை உணர்த்திடவே
பொம்மலாட்டம் செய்யப்போறேன்!!
அன்பன்
மகேந்திரன்










