Powered By Blogger
Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Friday, 20 April 2012

கவிதை தந்த விருது!!






நிழற்படங்கள் இரண்டினை
கருவாய்க் கொடுத்து! - எம்
மனச் சுரங்கத்தை
சொற்கோடரி  கொண்டு
துளைத்தெடுக்க வைத்து
வாரீர்! வந்து பாரீர்!
பார்த்து கவிதை படைத்து 
விருந்து தாரீர்!! - என
அழைப்பும் விடுத்து
வடித்த கவிதைக்கு
விருதும் கொடுத்த - என்
அன்பு சகோதரி ஹேமா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஹேமா அவர்களின் கவிதையில் வரும் சொல்லாடல்கள் மிகவும்
பிரமிக்க வைக்கும். வார்த்தைகளால் வண்ணமிகு தோரணம் கட்டுபவர் அவர்.
அவரின் உப்புமாட சந்தியில் கவிதை எழுத வாரீர் என அழைப்பும் விடுத்து
அங்கு எம்மால் எழுதப்பட்ட கவிதைக்கு விருதும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் என்பது தான் தட்டிக்கொடுக்கும் ஒரு
மாபெரும் சக்தி. அத்தகைய அங்கீகாரத்தை எமக்களித்த
சகோதரி ஹேமா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

உப்புமாட சந்தியில் என் கவிதை...




ண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

==============================================


..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!



அன்பன்
மகேந்திரன் 

Tuesday, 6 March 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் ...!!! ( தொடர்பதிவு )







லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி 
பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் 
திரும்ப வராதா என்ற ஏக்கம் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்கிறது.
இப்படி ஒரு தலைப்பில் என்னை எழுத அழைத்த பாசத்திற்குரிய என் 
அன்பு சகோதரி ஷைலஜா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தாயின் 
முதல் கருவறைக்குப் பின் அடுத்த இரண்டாம் கருவறையாய் அமைந்த 
பள்ளிக்கூடத்தின் நினைவுகள் பற்றி எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு 
அகம் மகிழ்கிறேன்.
 

 


ரைக்கால் சட்டையில் இருபுறமும் கயிறுவைத்து முதன்முதலில் 
பள்ளிக்கு போன நாளை எண்ணும்போதே மனதுக்குள் சந்தோசமும் 
நகைப்பும் சேர்ந்தே வருகிறது. 

எல்.கே.ஜி, யு.கே.ஜி எல்லாம் அப்போது இருந்ததா என்றே தெரியவில்லை 
நேரடியா முதலாம் வகுப்பு தான். பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு 
கூட்டிச் சென்றார்கள். 

"பையனைப் பார்த்தால் ரொம்ப சின்னவனா இருக்கான். அதனால அடுத்த 
வருடம் சேர்த்துக்கொள்ளலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல 
" சார் படிச்சிருவேன்.. பாருங்க எனக்கு கையால காதைத் தொட முடியும்" என்று
வலது கையை உச்சந்தலை வழியாக இடது காதை தொட குனிந்து நெளிந்து 
எத்தனித்தேன்.அதைப்பார்த்ததும் தலைமை ஆசிரியர் சிரித்துக் கொண்டே " சரி சரி சேர்த்துக்கொள்கிறேன் நல்லாப் படிக்கணும்" என்று சொன்னவாறு என் பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார்.
 
 
யிரெழுத்தை என் 
உயிருக்குள் நுழைத்து 
மெய்யெழுத்தை என் 
மெய்க்குள் திணித்து 
உயிரும் உடலுமாய் 
ஆரம்பித்த ஒன்றாம் வகுப்பு........

ண்ணும் எழுத்தும் 
இரு கண்ணென அறிந்து 
இயைபோடு படிக்கையில் 
அருகிலிருந்த பெண்ணொருத்தி 
என்னைவிட நன்றாய்ப் படிக்க
மனதிற்குள் போட்டியும் 
பொறாமையும் வளர்த்த 
இரண்டாம் வகுப்பு.......

புதிதாய் வந்த திரைப்படங்களின் 
குணாதிசயங்களின் பெயர்களை 
எங்களுக்கு சூட்டிக்கொண்டு 
நட்பும் பகையுமாய் 
மதியஉணவில் மக்காச் 
சோளச் சோறு தின்று 
மப்புடன் படித்துவந்த 
மூன்றாம் வகுப்பு............
 
 
ரம்பியல் பாதிப்பால் 
வலிப்பு வந்து துன்புற
என் உயிரை அன்றும் 
இரண்டாம் முறை மீட்டெடுத்த 
என் தாய்தந்தையர் ஒருபுறம் 
அதன் பின் பெற்றபிள்ளை போல 
அன்பாக பாவித்த 
தனலட்சுமி ஆசிரியை மறுபுறமென 
நன்றாய் கழிந்த 
நான்காம் வகுப்பு........................

லைமை ஆசிரியரே 
வகுப்பு ஆசிரியராய் வர
முதல் முறையாய் 
கூரைவேய்ந்த பள்ளியறை விடுத்து 
ஓடுவேய்ந்த பள்ளியறையினுள்
சற்று பயத்துடன் நுழைந்து 
நடுநிலைப் பள்ளிக்கு 
செல்வதற்கான நடுக்கத்தை 
சற்றே குறைத்து வைத்த 
ஐந்தாம் வகுப்பு...........................

சில நல்ல பழக்கங்களையும் 
சில தீய பழக்கங்களையும் 
சரிவிகிதத்தில் கலந்து 
வாழ்விற்கான முதல் தெளிவை 
அமுதாய் ஊட்டிய 
ஆறாம் வகுப்பு...............................
 
 
முதன் முதலாய் 
வரலாற்றுப் பாடத்தை 
நடத்தும் ஆசிரியர் - அதை 
நடித்தே காண்பித்து 
மூளைக்குள் இன்றும் 
அந்தக் காட்சிகளை 
அசைபோட வைத்த 
ஏழாம் வகுப்பு...............................

ங்கிலத்தின் பெயரைக் கேட்டாலே 
அவயம் நடுங்கியதை 
சற்றே தனித்து 
ஆங்கிலமும் நம் வசப்படுமென 
அழகாய் எடுத்துரைத்த 
ஆசிரியரை எனக்களித்த 
எட்டாம் வகுப்பு....................................

( எட்டாம் வகுப்பில் என் ஆசிரியர் ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் பற்றி சொல்கையில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் " The sentence never end with BECAUSE BECAUSE BECAUSE is a conjunction" இன்றும் மனதில் நிழலாடுகிறது )

றிவியலின் ஆளுமைக்கு 
அருஞ்சொற்பொருள் கொடுப்பதெல்லாம் 
கணிதம் எனும் புனிதமே - என 
கணிதத்தை எனக்கு 
கனிவாய் கற்பித்த 
ஒன்பதாம் வகுப்பு............................
 
 
பொத்தாம் பொதுவாய் 
படித்து வந்தவனை 
பின்னந்தலையில் தட்டி 
இவ்வகுப்பே உன் 
வாழ்வின் ஆதாரமென 
சிரசில் உறைக்கவைத்து 
இன்றும் நான் மதிக்கும் 
ஆசிரியர்களை என் வாழ்வில் 
அறிமுகப் படுத்திய 
பத்தாம் வகுப்பு...........................................

ரும்பு மீசை வளர 
இனம்புரியா ஆசைகள் வளர 
திரிகோணமிதியை சற்றே 
கலவரத்துடன் என்னை 
கவனிக்க வைத்த 
பதினோராம் வகுப்பு......................

ரசாயனமே உனக்கு வாழ்வு 
இன்றே கற்றுக்கொள் என 
கற்பித்துக் கொடுத்திட 
இறுக்கமுகத்துடன் இருந்தாலும்
இளகிய மனம் கொண்ட 
ஆசிரியரை எனக்கு அளித்து
இரசாயனத்தை எனக்கு 
இன்னிசை கீதமாய் 
உரைத்திட்ட 
பன்னிரெண்டாம் வகுப்பு........................
 
 
ன்னும் எழுதிக்கொண்டே போகலாம். பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டது.
இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத நான் அழைக்கும் பதிவர்கள்.....

 
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

Friday, 17 February 2012

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)


லையுலகின்  வீசுதென்றலாய் கவிதைகளில் தென்றலின்
இன்பத்தை சுவைக்க வைக்கும் என் அன்புத் தங்கை சசிகலா
அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கினங்க இந்தப் பதிவு.. 

சொந்த ஊர் என்று சொல்லும்போதே கொஞ்சம் புன்னகையும்
இதழோரம் கலந்துவிடுவது இயல்பான செயல். நம்ம பிறந்த
ஊரைப்பற்றி சொல்லணும் என்றால் சொல்லிக்கிட்டே இருக்கலாம்..
 
ர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும்.
வாங்க.. வாங்க.. உட்கார்ந்து பேசுவோம் எங்க ஊரு பெருமை பற்றி.
 
தென் தமிழகத்தின் வரலாற்றில் நிலைபெற்ற சின்னமாய் விளங்கும்
தூத்துக்குடி என் ஊர். இதற்கான பல பெயர்க்காரணம் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று அன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்
வருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும்
பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...
 
தூத்துக்குடி நகர் ஒரு வளர்ந்த கிராமம் போல.. நகரின் மையப்பகுதியில் இருந்து
பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு அப்புறம் மேற்கு நோக்கி சென்றாலோ அல்லது
தெற்கு நோக்கி சென்றாலோ பசுமையாய் இருக்கும்.
 
 
 
நாட்டின் பெரும்பாலானோர் உணவில் பயன்படுத்தும் உப்பில் ஒரு கல் உப்பாவது
எங்க ஊரு உப்பாக இருக்கும். பரந்த பாரத நாட்டின் உப்பு உற்பத்தியில்
இரண்டாம் இடம் வகிக்கிறது எங்க ஊர். அது தவிர பல முக்கியமான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 
ங்க ஊர் கடலோரம் அமைந்த தான்தோன்றி பனிமய மாதா திருக்கோவில்
மிகவும் புகழ் வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5 ம் நாள் இங்கே
கோலாகலத் திருவிழா நடக்கும்.
 
எங்க ஊர் பேச்சு வழக்கை இங்கே கொஞ்சம்
சொல்ல முயற்சிக்கிறேன்...
 
ம்லே ஏகாம்பரம்
இங்கிட்டு எங்க வந்தே?
அண்ணாச்சி
நல்லா இருக்கீகளா?
நான் சும்மா அப்படியே
ஊர சுத்தி பாத்திட்டு
எல்லாரும் நல்லா இருக்கீகளா னு
பாத்துட்டு அப்படியே
அங்கிட்டு கூடி
திருச்செந்தூரு போகலாம் னு வந்தேன்..
 
ஏலேய்
நல்லா ஏசிப்புடுவேன் பாத்துக்கோ
இந்தாள இங்க வர வந்துபுட்டு
வீட்டுக்கு வராம போனீன்னா
அப்பறம் நல்லா இருக்காது
சொல்லிபுட்டேன்...
 
இப்படி ஏழு ஸ்வரங்களுடன் எட்டாவது ஸ்வரமாய் எங்க ஊரு தமிழை
சேர்க்கலாம்..அவ்வளவு எழில்மிகு சிறப்பு.
=========================================================================
 
இந்தப் பதிவை தொடர்வதற்காக நான் அழைக்கும் என் சொந்தங்கள்..
 
திவுலகில் என் தோள்குலுக்கி உறவுமுறையோடு அருமையாய் பழகும்
அருமை காட்டான்  மாமா... இவரின் எழுத்து நடைக்காகவே இவர் பதிவுகளை
பார்க்க விரும்புகிறேன்.
 
டிக்க ஆரம்பிக்கையில் கமல மொட்டுக்களாய் துவங்கும் இவரின் பதிவுகள்
படித்து முடிக்கையில் மலர்ந்து செந்தாமரையை மனம் வீசும் எழுத்துக்குச்
சொந்தக்காரர் அன்பு சகோதரி கீதமஞ்சரி.
 
கோவை மாநகரின் இதமான ஈரக்காற்று போல இவர் பதிவுகளிலும்
இதமும் பதமும் இனிமையுற நூற்றுக்கொடுக்கும்
கோவையின் கொன்றைவேந்தன் என் அருமை நண்பர் ரமேஷ் வெங்கடபதி
 
மிழின் சுவையை தான் எழுதிய பக்தி பாமாலைகளால் என் மனதை கொள்ளை கொண்டு மனதில் நீங்கா இடம் பிடித்த ஐயா தமிழ்விரும்பி ஆலாசியம் அவர்கள்.
 
 
அன்பன்
மகேந்திரன்

Monday, 6 February 2012

புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)






புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு

எழுத அழைத்த என் மரியாதைக்குரிய சகோதரர் ரெவெரி அவர்களுக்கு நன்றிகள். 
 
இதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....
 
வ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற முடியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
 
ழங்கப்படா தீர்ப்புகளாய் 
ஆயிரம் ஆயிரம் வாதங்கள் 
நிலுவையில் நிற்கையிலே 
இன்னும் சில வாதங்கள் 
பிரதி வாதங்களை எதிர்நோக்கி 
இவ்வாண்டு முழுவதும்!!
 
ருசக்கர வாகனத்தை
இயைபாய்த் தேடும் என் மனம்
இன்றேனும் நடக்கலாமே - என
இடிக்கும் தினமும்!
இந்த விடுமுறை நாட்களில்
இதை நான் செய்விக்க
இனிதே ஓர் தீர்மானம்!!
 
ருவைச் சுமந்தாலும்
காலம் கனியவில்லை
கனவே என நான் கொண்ட
கருத்தாழம் மிகுந்த
நாட்டுப்புறத் தொடர் ஒன்றை
கட்டிக்கரும்பென தித்திக்க
களிப்போடு கொடுத்திடவே
கருத்திலோர் தீர்மானம்!!
 
நாளும் பொழுதுகளும் 
நயமாய் செல்கையிலே 
நல்லுறவு நட்புக்களோடு
திங்களுக்கு ஒருமுறையேனும்
நான்குவார்த்தை பேசிடவே
தொலைபேசி அழைத்திடவோர்
நான் ஏற்ற தீர்மானம்!!
 
தீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்
என்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.
ஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்
இவ்வாண்டின் முடிவில்.
 
த்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....
(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)
 
 
அருமைச் சகோதரி ஸ்ரவாணி
 
அருமைச் சகோதரி சந்திரகெளரி
 
அருமை நண்பர் கணேஷ்
 
 
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்
 
 

Sunday, 5 February 2012

மனமகிழ் தருணம்!!







றைக்க இறைக்க
நீரூறும் கேணி - போல
நினைத்த கருக்களை எல்லாம்
எழுத்தாக வடிக்க
பதிவுலகம் கிட்டிடவே - நான்
என்ன தவம் செயதேனம்மா!!
 
ழுத்துக்களை வடித்த பின்
மனதில் உள்வாங்கி
உன்னெழுத்து பிடித்ததென
நயமாய் கருத்திடவே
நல்லுள்ள நட்புகள் கிடைத்திடவே
என்ன தவம் செயதேனம்மா!!
 
நீயும் ஒரு பதிவனென
அங்கீகாரம் கொடுத்திடவே
பல்விருது கொடுத்திங்கே
எனை மகிழச் செய்வித்த
என்னுயிர்த் தோழமைகளுக்கு
நட்புள்ளத்தை வாஞ்சையோடு
தாரை வார்க்கிறேன்!!
 
 
 
 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த  
தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக.

'லீப்ச்டர்" விருதினை அன்போடு எனக்களித்த எனதருமை நண்பர்
மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதை பெற்றதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்குஅளவே இல்லை...
 



========================================================================
இதோ என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை
அளிக்கவேண்டும் என்பது தார்மீகம். அதை இங்கே நிறைவேற்றுகிறேன்..
 
பதிவுலகில் எனக்கு கிடைத்த சகோதரர். ரெவெரி சமூக கருத்துக்களை நாசூக்காகஎழுதுவதில் வல்லவர். கூடங்குளம் போராட்டம் பற்றிய நேரடிப் பதிவினைஇப்போது எழுதி வருகிறார்...
 
 
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா என்ற தொடரை எழுதி என் நெஞ்சினில்
அருமைத் தம்பியாய் குடியேறியவர் துஷ்யந்தன். வர்ணனைகளை வார்த்தைகளில்மென்மையாய் உரைக்க வல்லவர்.
 
 
பல்சுவைப் பதிவுகளின் மன்னன். எங்கள் குமரி நாட்டு வேந்தன். என் மனதிற்கினியநண்பர் நாஞ்சில் மனோ. மனதினில் ஆயிரம் ஆயிரம் கவலைகள் இருந்திடினும் இவர்பதிவுகளை படித்தால் மனம் இறகு போல இலகுவாகிவிடும்.
 
 
தமிழ் கொஞ்சும் வார்த்தைகளால் கவி வடிப்பதில் வல்லவர். கருக்களை சுமந்து நிற்கும்கருப்பை என்றே சொல்லலாம்  என் மரியாதைக்குரிய நண்பர் ரமணி அவர்களை.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் இவர் உரைக்கும் ஒவ்வொரு பதிவும் ஆயிரம் ஆயிரம் பொற்களஞ்சியங்களுக்கு சமம்.
 
வலையுலகில் சங்கத் தமிழை தாலாட்டாய் சிறு பிஞ்சு நெஞ்சங்களும் மனதிற்குள்பதிவேற்கும் விதமாய் அருமையாய் தமிழ்த் தொண்டாற்றிவரும் என் வணக்குதலுக்குரிய நண்பர் முனைவர் இரா.குணசீலன். பல்வேறு கோணங்களில் இவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு நான் அடிமை. 

 
இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப, அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினைஇன்புற வழங்கிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றிகள் பல.
 
 
அன்பன்
மகேந்திரன்

Friday, 20 January 2012

வசந்தத்தின் நூறாம் தோரணம்!!!






சந்தத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமாம்!
வானவில்லே தோரணமாய்
வந்திறங்கிய காரணமாய்!
நட்சத்திரப் பூக்களெல்லாம்
நாவற் பழம்போல
கூடிவந்து பூத்திருந்த
வசந்த மண்டபமாம்!!

சந்தத்தின் வயதின்று
பத்து திங்கள் ஆனதுவே!
திங்களுக்கு ஒருபத்தாய்
பத்துமுறை ஈன்றெடுத்தேன்!
இன்று நான் ஈனுவதோ
நூறாவது சிசுவென்பேன்!!

ருசுமந்து நான்பெற்ற
சிசுவிங்கே ஒவ்வொன்றும்!
மின்னுகிற பொன்னைப்போல்
தகதகத்து தெரிவதெல்லாம்
ஆழ்ந்து படித்துணர்ந்து
அழகாக கருத்திட்ட
உங்களால் தானன்றோ!!

சிவப்பு கம்பளம் விரித்து
வாசப் பன்னீர் தெளித்து
தாம்பூல சகிதமாய்!
மனம் நிறைந்தோரை
மனமார வரவேற்கிறேன்!
வாருங்கள் வசந்த மண்டபத்திற்கு!
இனி பூக்கும்
வசந்த பூக்களுக்கும்
உங்கள் வாழ்த்துக்களை
அருளுங்கள்!!







நேசத்தகு உள்ளங்களே,

திவுலகில் கால்பதித்து பத்து மாதங்கள் ஆன இந்நிலையில்
இதோ நூறாவது பதிவைத் தொட்டிருக்கிறேன். என்னை
கரம்பிடித்து அன்போடு ஆதரவோடு பதிவுலகில் நிலைபெறச்
செய்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும். கருத்திட்டு என்
படைப்புகளை எழுத்துக்களை அழகுறச் செய்த அத்தனை நேச
உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

முதன்முதலாய் முகம் தெரியாது வந்து கருத்திட்டு என்னை வாழ்த்திய
தோழர் ஜானகிராமன், சகோதரி கீதா அவர்களை இந்நேரத்தில்
நினைவு கொள்கிறேன்.

லைச்சரம் என்பது என்றால் என்ன? என்ற நிலையில் இருந்த என்னை
முதன்முதலாய் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி அடையாளம் காட்டிய
அன்பு நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களையும் நினைவில் தருவிக்கிறேன்.

திவுலகில் வசந்தமண்டபம் கட்டி ஆறாவது மாதத்தில் வலைச்சரம் தொடுக்க எனை அன்போடு அழைத்து, மாணவனாய் இருக்கும் எனை ஆசிரியராய் பணியாற்ற உன்னால் முடியும் என தட்டிக்கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் பணிவான வணக்கங்களும்.

தொடர்பதிவுகளுக்காக என்னை அழைத்து என் எழுத்துக்களை ரசித்த
தோழர் ஜா.ரா.ரமேஷ்பாபு, சகோதரி சாகம்பரி அவர்களையும் இங்கே
நினைவில் நிறுத்துகிறேன்.

ன் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து, அதை ரசித்து விருதளித்து என்னையும் என் எழுத்துக்களையும் பெருமைப் படுத்திய  அன்பு முனைவர்.இரா.குணசீலன், நண்பர் நாஞ்சில் மனோ அவர்களையும் இங்கே நன்றிகளுடன் வணங்குகிறேன்.

ன்னை தன் தளத்தில் அறிமுகப்படுத்தி பதிவுலகில் நான் வளர்ந்திட நீரூற்றி வளர்த்த சகோதரர் நிரூபன், சகோதரர் ரெவெரி, நண்பர் சங்கவி அவர்களுக்கும், முகநூல் மூலம் என்னையும் என் படைப்புகளையும் பெருமைப் படுத்தும் காட்டான் மாமா, ரத்னவேல் ஐயா
அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.

தினம்தினம் என் தளம் வந்து படித்து கருத்திட்டோருக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்தோருக்கும், என்னைப் பின்தொடர்பவர்களுக்கும்,
படைப்புகளில் வரும் பிழைகளை திருத்தி என்னையும் என் எழுத்துக்களையும்
சீர்படுத்தும் தோழமைகளுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் என்
சிரம்தாழ்ந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன்

Tuesday, 4 October 2011

இதயம் இறக்கிலனே!!






பதிவுலகில் கால்பதித்து இருநூறாவது நாள், நாட்டுப்புறக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த என்னை பன்முகக் கவிதைகளை புனையவைத்த வசந்தமண்டபம் கட்டி முடித்து இன்று இருநூறாவது நாள்.

வசந்தமண்டபம் நாடிவந்து வாசமிகு மலர்கள் முகர்ந்து, அங்கே வீசும் தென்றல் காற்றின் சுகம் காண வந்தவர்கள் நூறு தோழமைகள். என்னையும் என் எழுத்துக்களையும் கருவாய் இருந்து உருவேற்றும்
அந்த நூறு அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

இதோ அவர்களுக்காய் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்.




மகிழம்பூ வாசமது
மாறாது மணந்திருக்கும்!
மல்லிகைப்பூ பந்தலிலே
மெல்லிசை மீட்டிவரும்!!

தென்பொதிகை தென்றலங்கே
தவழ்ந்து விளையாடும்!
சிறகடிக்கும் செவ்வண்டுகள்
சிறப்பிசை பாடிவரும்!!

சுட்டெரிக்கும் ஆதவனும்
சலனமாய் தன்கதிர்களை
சுள்ளெனப் பாய்ச்சாது
சுகராகம் பாடிவரும்!!

காலைப் பொழுதாகிடினும்
தண்ணிலவு தன்னிலை
தனக்கென வேண்டுமென
தவமாய் தவமிருக்கும்!!




நாடி வந்தவர்களை
வாசப் பன்னீர் தெளித்து
வெண்சாமரம் வீசி
வரவேற்கும் வசந்தமண்டபம்!!

வசந்த மண்டபத்தின்
வாஞ்சைமிகு தோற்றத்தை
தூண்களாய் தோளேற்றி
வடிவம் கொடுத்தோரே!!

சிறியேனின் எழுத்துக்களை
சிறகடிக்க வைத்து
புவனம் பரவச் செய்த
புண்ணிய நட்போரே!!

இருநூறு நாட்களென
எண்ணியிருந்த போது
நூறு தூண்களாய்
தூக்கி நிறுத்தியோரே!!




பின்தொடரும் நீவீரை
வசந்த மண்டபம்
வாழ்நாள் உளமட்டும்
இதயம் இறக்கிலனே!!


அன்பன்
மகேந்திரன்