வெள்ளிக்கொம்பு நாயகனே
துள்ளியிங்கே வாருமய்யா!
தெள்ளுதமிழ் வார்த்தைகளை
அள்ளிவந்து தாருமய்யா!!
கந்தனுக்கு மூத்தவனை
சிந்தனையிலே தான் நிறுத்தி
தந்தனத்தோம் என்றுசொல்லி
வில்லெடுத்து பாடவந்தேன்!!
முன்னவரின் வாழ்க்கையிலே
சொல்லிச்சென்ற சேதியெல்லாம்
சின்னவன் நான் உங்கள்முன்னே
வில்லெடுத்து பாடவந்தேன்!!
மார்போடு ஒட்டியங்கே
போரிலே விளையாண்ட
பாருக்கு கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!
பனைமரக் கம்பெடுத்து
கணையொன்னு வடிவமைத்து
புனைந்த ஏழடி நீளமது
வில்கதிர் என்பதய்யா!!
வண்ணத்துணிகள் கட்டி
வெண்கலமணிகள் பூட்டி
இணைத்து இசையமைக்க
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்கதிர் இணைத்திடவே
தோலால் நாணேற்றி
பல்சுவைக் கதைசொல்ல
வில்லெடுத்து பாடவந்தேன்!!
மண்ணால் செய்வித்த
குடமேனும் கடமதையே
கதிரோடு சேர்த்துபூட்டி
வில்லெடுத்து பாடவந்தேன்!!
வில்லிணைத்த நாண்மீது
தட்டித்தட்டி இசையெழுப்ப
வெண்கலப் பரல்களிட்டு
வீசுகோல் கொண்டுவந்தேன்!!
கன்றின் தோல்கொண்டு
பனங்கிழங்கு நார்சுற்றி
சிறப்பாக பாட்டிசைக்க
சித்துடுக்கை செய்துவந்தேன்!!
வாழைநார் வாங்கிவந்து
வைக்கோலை சேர்த்துக்கட்டி
குடம்வைத்து தானடிக்க
பத்தியொன்னு கொண்டுவந்தேன்!!
பன்னிசை உருவேற்றி
பாங்காக வில்லிசைக்க
புவியில் சிறுவன் நான்
அண்ணாவி ஆகிவந்தேன்!!
ஐந்துபேர் சேர்ந்திங்கே
ராசமேளம் தானிசைத்து
வில்லிசை சிறந்திடவே
ஐங்கரனை நினைத்தோமே!!
சிரசின் மேலோங்கி
கரங்கள் குவித்திங்கே
வந்தனம் செய்தோமே
காப்பிசை பாடிவந்தே!!
கருவிலே உருவாகி
தெருவிலே அலைந்தவனை
தருவித்து கையாண்ட
குருவிசை பாடிவந்தேன்!!
அலங்கார மேடையிலே
சான்றோர்கள் சபைமுன்னே
சந்தங்கள் பலபாடி
சரித்திரங்கள் கூறிவந்தோம்!!
ஆள்வோர்கள் அவைமுன்னே
ஆண்டவனை வேண்டியிங்கே
விவசாயி வேதனையை
வில்லெடுத்து பாடவந்தேன்!!
ஆழஆழ மண்ணுழுது - ஆமா மண்ணுழுது
விதைய நல்லா பரப்பி வந்தோம்!
நாத்தாக வளர்ந்த பின்னே - ஆமா பின்னே
அதையெடுத்து பாவிவந்தோம்!!
ஆழஆழ கேணியிலே - ஆமா கேணியிலே
கமலையிட்டு இறைத்துவந்தோம்
பரந்திருந்த பாத்தியெல்லாம் - ஆமா பாத்தியெல்லாம்
சீராக ஊற்றிவந்தோம்!!
பயிருக்கு இடையிலதான் - ஆமா இடையிலதான்
களையெல்லாம் பறித்துவந்தோம்!
பயிரெல்லாம் வளரையிலே - ஆமா வளரையிலே
பிள்ளைபோல காத்துவந்தோம்!!
ஆண்டுக்கொரு ரெண்டுபோகம் - ஆமா ரெண்டுபோகம்
அழகாக எடுத்துவந்தோம்!
விளைந்தபயிர் விற்கையிலே - ஆமா விற்கையிலே
குறைந்தவிலை போச்சுதய்யா!!
கண்ணுபோல காத்துவந்த - ஆமா காத்துவந்த
மணிபோன்ற நெல்களெல்லாம்
அடிமாட்டு விலைபோக - ஆமா விலைபோக
கண்ணீரை வார்த்துவந்தோம்!!
பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்
நான்விற்ற நெல்களெல்லாம்
மூன்றாக விலையாகி - ஆமா விலையாகி
சந்தையிலே வாங்கிவந்தோம்!!
சேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா
சாதமிங்கே உனக்கேதய்யா!
குருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை
உருக்குழைய செய்யாதய்யா!!
நானுமிங்கே மனிதனய்யா - ஆமா மனிதனய்யா
உன்னைப்போல வாழவேனும்!
நாஞ்செய்த வேலைக்கெல்லாம் - ஆமா வேலைக்கெல்லாம்
கூலிவந்தா போதுமய்யா!!
ஆண்டுவரும் பெரியோரே - ஆமா பெரியோரே
காதில்வாங்கி போட்டுக்குங்க!
உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா
குடியெல்லாம் உயருமய்யா!!
நல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க
நாடுயர செய்திடுங்க!
நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா
விவசாயி வாழவேனும்
ஆமா
வாழவேனும்!!!!
அன்பன்
மகேந்திரன்


















