Powered By Blogger

Wednesday 17 August 2011

அழகெனில் யாதென்றால்!!!






திகைக்கச் செய்யும்
வனப்பின் அழகில்
திளைத்து இருக்கையில்
கணைகளாய் வினாக்கள்
விளைந்தன அகத்தில்!!

சூழலின் பிடியில்
சிக்கித் தவிக்கையில்
சிந்தையில் உதித்த
கேள்வியின் சாரமே
அழகெனில் யாது?!!




கேள்வியும் எனதே
பதிலும் எனதுள்ளே
மனதின் மேடையில்
வியாபித்த வினாக்களை
வினவிப் பார்த்தேன்!!

எழிலின் அழகுற
மயிலின் நாட்டிய
அழகை வியக்கையில்
அகவல் குரலோ
உவகை அளிக்காததேன்?!!




சங்கீத சாரமாய்
குயிலினம் கூவிய
குரலில் எனை மறக்கையில்
கரிய நிறமோ
கவனம் சிதைத்ததேன்?!!

திவலையாய் நீர்த்துளிகள்
வானின்று பொழிகையில்
விரிந்த விழிகள் - கரிய
கார்மேகம் காண்கையில்
இமைகள் மூடியதேன்?!!




விளைந்த வினாக்களை
மௌன மொழியால்
மனத்தைக் கேட்கையில்
விடைகள் கிடைத்தது
அழகெனில் யாதென்றால்!!!

அமிழ்தெனும் அழகெலாம்
நிறமெனும் நிர்மலத்தின்
காட்சிப் பொருளல்ல!
செய்யும் செய்கையின்
விளையும் பலனே
அழகின் வடிவாம்!!




ஏ! மனிதா!
ஆங்காரம் கொள்ளாது
அன்பால் இயம்பிப்பார்!
அகிலமும் அழகாகும்!!

உடலுடன் சேர்த்து
அறிவையும் வளர்த்துப்பார்!
ஆற்றல்கள் அழகுபெறும்!!

வந்ததை பேசாது
வாய்மொழி வடிவேற்றி
உண்மையைப் பேசிப்பார்!
சொல்வன்மை அழகுறும்!!




தீஞ்சொற்கள் தவிர்த்து
மரியாதை நிமித்தம்
நன்சொற்கள் இயம்பிப்பார்!
உறவுகள் அழகுபெறும்!!

ஏழ்மை ஏகினும்
ஏய்ச்சிப் பிழைக்காது
உழைத்து உண்டுபார்!
உலகே அழகாகும்!!

அன்பன்
மகேந்திரன் 

34 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு!
கவிதையும்!
நிழற்படங்களும்!

முனைவர் இரா.குணசீலன் said...

ஏழ்மை ஏகினும்
ஏய்ச்சிப் பிழைக்காது
உழைத்து உண்டுபார்!
உலகே அழகாகும்!!

எனக்குப் பிடித்த அழகு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகை பட்டியலிட்டு அசத்தியுள்ளீர்...

பார்க்கும் பார்வையிலும் பார்ப்பவரின் ரசனையிலும் தான் அழகு புரையோடியிருக்கிறது....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
பசியைக்கூட ரசிக்க கற்றுக் கொடுத்துள்ளதால்...

கவிதைக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

மாலதி said...

அமிழ்தெனும் அழகெலாம்
நிறமெனும் நிர்மலத்தின்
காட்சிப் பொருளல்ல!
செய்யும் செய்கையின்
விளையும் பலனே
அழகின் வடிவாம்!!//அழகை பட்டியலிட்டு அசத்தியுள்ளீர்...

Anonymous said...

சிறப்பு...மகேந்திரன்...
புதிதாய் படங்களும் அருமை...
வாழ்த்துக்கள்...

Unknown said...

எடுத்துச் சுட்ட இயலாதே-இதில்
எல்லா வரிகளும் மல்லியிலே
தொடுத்த சரமாம் என்றாலே-இதயம்
தொட்டே மணக்கும் ஒன்றாலே
வாழ்த்துடன் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

M.R said...

அழகைப் பற்றி
அழகான வரிகளில்
அருமையான கவிதை

உடல் தோற்றத்தை விட
உள்ளத் தோற்றம் உண்மையானது

கருத்து அருமை ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ் மணம் மூன்று

மாய உலகம் said...

அன்பே அழகு என்பதை அசத்தலான கவிதையில் கலக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

மகேந்திரன் said...

அன்பு நண்பர் முனைவர்.இரா.குணசீலன்
தங்களின் மேன்மையான கருத்துக்கு
என் உளம்கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் மேலான கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி
தங்களின் இனிய கருத்துக்கு
என் உள்ளார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

ஐயா இராமானுசம் அவர்களே,
தங்களின் தேன்தமிழ் கவிதையின் சுவையிலே
திளைத்தேன். தங்களின் வாழ்த்துக்கும் இனிய கவித்தைக் கருத்துக்கும்
மிக்க நன்றி ஐயா

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
தங்களின் இயல்பான கருத்துக்கும்
ஓட்டளிப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

மாய உலக நண்பர் ராஜேஷ்
தங்களின் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
என் உளம்கனிந்த நன்றிகள்.

கோகுல் said...

நிச்சயம் உலகே அழகாகும்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
என் நெட் கனெக்சனி ஏதோ ஒரு ப்ராப்ளம்,
அதனால் தான் வலைக்கு ஒழுங்காக வரமுடியவில்லை.
மன்னிக்கவும்.

நிரூபன் said...

அழகு என்றால் என்ன என்பது பற்றி, அருமையான விளக்கத்தினை கவிதை மூலம் தந்திருக்கிறீங்க.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கோகுல்
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
நான் நல்ல சுகம், நீங்க எப்படி இருக்கிறீங்க?
நீங்கள் என் வலைப்பக்கம் வந்து கருத்தளிக்கையில்
மனதுக்கு சந்தோசம். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் சகோ.....
உங்களுக்காக வசந்தமண்டபம் எப்போதும் சாமரத்துடன்
காத்திருக்கிறது............
தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

செய்யும் செய்கையின்
விளையும் பலனே
அழகின் வடிவாம்!!//

அழகான வரிகள்.

vidivelli said...

வந்ததை பேசாது
வாய்மொழி வடிவேற்றி
உண்மையைப் பேசிப்பார்!
சொல்வன்மை அழகுறும்!!

தீஞ்சொற்கள் தவிர்த்து
மரியாதை நிமித்தம்
நன்சொற்கள் இயம்பிப்பார்!
உறவுகள் அழகுபெறும்!!

நிச்சயமாக!!!!!!!!!


அழகழகாய் சொன்னீங்க மனிதன் அழகுபெற...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் உறவே...

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

Riyas said...

கவிதை அழகு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரியாஸ்
தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில் பதித்தமைக்கும்
இனிய கருத்திட்டமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சாகம்பரி said...

//வந்ததை பேசாது
வாய்மொழி வடிவேற்றி
உண்மையைப் பேசிப்பார்!//
இது போல் பேசாதோர் 'வாய்சொல்லில் வீரரடி' என பாரதியின் கோபம் உரைக்கிறது கவிதை. நன்று.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சாகம்பரி
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் .ஓட்டுப்
ஓட்டுப் போட்டாச்சு .....

kupps said...

அழகு என்பது அனைத்து இடங்களிலும் வியாப்பித்துள்ளது.அதனை உணர,ரசிக்க புரிதல் மட்டுமே அவசியம் என்பதை சிறப்பாக எடுத்துரைக்கிறது கவிதை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

Post a Comment