விசும்பின் போர்வையில்
விழித்தெழும் உலகின்
விடியலே என்னாலென
வீண் இறுமாப்பில்
வீற்றிருக்கும் கிழக்கே!!
உலகினுக்கு வெளிச்சத்தை
உதயனின் தயவால்
உவப்புடன் கொடுக்கும்
உன் வெற்றிக்குப் பின்னால்
உள்ளதென்ன அறிவாயோ?!!
இயைபாய்க் களைத்த
இரவியின் கவிழ்வால்
இருண்ட திசையென
இயல்பாய் ஏற்றிட்ட
இன்திசை மேற்கினை அறிவாயோ?!!
மண்டிலம் தானேற்று
மாநிலம் மழுக
மகிழ்வாய் அவப்பெயரேற்ற
மாதவத் திசையதுவே - உன்
மருவரல் வெற்றிக்குக் காரணமே!!
தன்னுடல் நெக்குருக
தனைச்சுற்றிய திசையெல்லாம்
தீச்சுடர் ஒளிதரும்
தண்மையான மெழுகினைப்போல்!
தகைவாய்க் கிழக்கது
தண்டலை எனும் பெயரேற்க
துகளேற்ற திசை மேற்கே!!
இனியேனும் கிழக்கே
என்னால் தான் எதுவுமென
இறுமாப்பு கொள்ளாதே
உன்னிலும் மேலானோர்
இச்சகத்தில் ஆயிரமே!!
அன்பன்
மகேந்திரன்
கையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:
மருவரல் – சூழ்ச்சி
மழுக – இருள்பரவ
துகள் – குற்றம்
தண்டலை – சோலை
மண்டிலம் - ஞாயிறு
இரவி - கதிரவன்
விசும்பு - ஆகாயம்