மாந்தோப்பில் திரியாதே
மந்திபோல் தாவாதே!
மந்தமாய் செயல்செய்து
மண்டு போல் ஆகாதே!!
மண்டு! மண்டு! என
மணிக்கு ஒருதரம்
செந்தேன் பாய்வதுபோல்
செவிவழி கேட்டிருந்தேன்!!
சொன்னதைச் செய்தேன்
செய்ததைச் சொன்னேன்!
வந்த விளைவுக்கெல்லாம்
மண்டு என பெயர்பெற்றேன்!!
விளைவிது வேண்டுமென
விரும்பியா வரவேற்றேன்?
முகவரியின்றி முளைத்ததற்கு
நான் எப்படி பொறுப்பாவேன்?!!
வடமிழந்த தேரதுபோல்
வாடிப் போனேன்!
வன்சொல்லாய் வார்ப்பெடுத்து
மண்டு எனக் கேட்கையிலே!!
எனக்கான விளைவுகளை
மூடிவைக்கத் தெரியாத எனை
மூடன் என அழைக்கையிலே
மூச்சிழந்து போனேன்!!
பெயர்ச்சொல்லாய் என் முன்னே
பூதம் போல நின்று!
பூச்சாண்டி காட்டியது
மண்டு எனும் சொல்!!
பேறுபெற பெற்றோரும்
கற்றுவித்த பெரியோரும்
எனக்கான நிலையதனை
மண்டு எனும் பெயர்ச்சொல்லால்
அலங்கரித்து நின்றபோது!
கலங்காதே பொன்மகனே
காலூன்றி எழுந்துவா!
உபரியாய் வந்தடைந்த
ஊனமான சொற்களை
வினைச்சொல்லாய் ஏற்றுக்கொள்!
விக்கித்து நிற்காதே
வீறுகொண்டு எழு என
பூந்தமிழ் சொன்னதுவே!!
செந்தூர செந்தமிழே
சத்தியமா சொல்கிறேன்!
நீமொழிந்த வார்த்தைகளில்
ஒன்றுகூட புரியவில்லை!
தெளிவாக புரிந்திடவை
தேனினிக்கும் மொழியாலே!!
மண்டு! மண்டு! என
பிறர் சொன்ன போதெல்லாம்
மூடன் என முழுதாக
பொருள் கொண்டாயே!
அதைக்கொஞ்சம் மாற்றிக்கொள்
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் நானுனக்கு
பொருள் கூறுகிறேன்
பொறுமையாக கேட்டுக்கொள்!!
நல்லதொரு நண்பர் கூட்டமதை
நயமாக கண்டறிந்து
நெருங்கி பழகிக் கொள்ளென!
ஒருபொருள் உண்டிங்கே!
கண்முன்னே நடந்தேறும்
சமூக அவலங்களை
சாதுர்யமாய் அழித்திடவே
திரளாக சேர்ந்து கொள்ளென!
மற்றொரு பொருளுண்டு!!
செயலேற்கும் செயலதை
விவேகமாய் முடித்திட
தீவிரமாய் செயல்படு - எனவும்
அதற்காய் வேகமாய்
புத்தியை செலுத்து - எனவும்
மாற்றுப் பொருளுண்டு!!
இன்றுனக்கு கிடைக்கும்
சிறிதான இடைவெளியில்
பலமாக காலூன்றி
இலக்கை நிர்ணயித்து
முழுமூச்சாய் ஈடுபடு - எனவும்
இன்னொரு பொருளுண்டு!!
அன்னைத் தமிழே!
எனைச் செதுக்கிய தாயே!
துவண்டிருந்த எனை
தூளிபோட்டு ஆட்டாது
துள்ளி எழச் செய்தாயே!!
விழிநீரைத் துடைத்தெறிந்தேன்
விழுதுகள் பிடித்தெழுந்தேன்!
மண்டு எனும் சொல்லை
வினைச்சொல்லாய் மாற்றிடவே!!
நிச்சயம் சொல்கிறேன்
மண்டு என இனிமேல்
யாரிங்கே சொல்லிடினும்!
தவங்கி விட மாட்டேன்
வினையூக்கியாய் மேற்கொண்டு
விண்ணை முட்டும்
புகழ் பெறுவேன்!!
அன்பன்
மகேந்திரன்