ஈருயிர் ஒன்றிணைந்து
ஓருயிர் ஈன்றதம்மா!
கருவினின்று வந்தபின்னே
சருகாகி உதிரும்வரை
பொருள் பல விளங்குதம்மா!!
ஓய்ந்த நிமிடங்களின்
மாய்ந்த பொழுதுகளில்!
தோய்ந்து உறவாடி
சாய்ந்திட எண்ணுகையில்
பாய்ந்து ஓடுதம்மா!!
முளைத்து வளர்ந்து
கிளைத்து ஓங்கியபின்!
விளைந்த உணர்வுகளால்
சளைத்த நெஞ்சமது
களைத்துப் போனதம்மா!!
அகழிகள் பலகடந்து
நிகழின் நிலைதனில்
புகழின் உச்சியிலே
நெகிழ்வாய் இருப்பினும்
மகிழ்விங்கு இல்லையம்மா!!
தரங்களைத் தருவித்து
நிரந்தர நிலைதனை
உரமிட்டு வளர்த்தும்!
சுரமற்று நிற்கும் - நான்
மரப்பாச்சி பொம்மைதானோ?!!
கறைகளாய் நெஞ்சத்துள்
உறைந்து காய்ந்துபோன
குறைகளைக் களைந்தும்
சிறையுண்ட மனம்விடுத்து
நிறைவு காண்பது எப்போது?!!
இப்போது இயற்றும்
தப்பாத செயல்களிலா?
முப்பொழுதும் கொண்ட
ஒப்பில்லா ஒழுக்கத்திலா?
எப்போது உறையும் தன்னிறைவு?!!
பதறாது உதிர்க்கும்
உதறாத சொற்களிலா?
சிதறாது சேர்க்கும்
இதரபிற பொருட்களிலா?
எதனால் கிட்டும் தன்னிறைவு?!!
அங்கத உறவுகளுடன்
சங்கமித்து இருக்கையிலா?
பொங்கிய துயரங்களை
தங்கிடாது அழிக்கையிலா?
எங்கனம் விளையும் தன்னிறைவு?!!
போதுமென்று எண்ணி
சாதுவாகி அமர்கையிலா?
ஏதுசெய்து கிடைத்தாலும்
பொதுவினில் வைக்கையிலா?
எதுவீனும் தன்னிறைவு?!!
கண்ணிமைக்கும் பொழுதினிலே
மண்கூட இடம் மாறும்!
பொன்னான இப்புவியில்
இன்வாழ்வு நிலைத்திட
தன்னிறைவே தகைவாய்!!
அன்பன்
மகேந்திரன்