ஆதியென்று எனக்கு இல்லை
வந்தவழி தெரியாது!
இயன்றவரை மனிதனுக்கு
நற்பலனை கொடுப்பேனே!!
முக்கனியாய் பிரித்தபோதும்
முதல் கனி நானென்று!
முன்னோர்கள் அன்றுதொட்டு
முத்தாய்ப்பாய் வகுத்தனரே!!
அகண்ட காவிரியின்
அகண்ட காவிரியின்
அகந்தையை ஒழித்திட்ட
அகத்திய முனிவனும்
அரக்கன் வாதாபியை
அரக்கன் வாதாபியை
அழித்ததும் எனைக்கொண்டே!!
ஞாலம் எங்கிலும்
ஞான ஊற்றெடுக்க
ஞான முனிவனால்
ஞானப்பழம் என்ற
ஞானப்பெயர் பெற்றேனே!!
ஞானப்பழம் என்றபெயர்
தமிழெனக்கு சூட்டியது!
அறிவினைப் பெருக்கும்
பொட்டாசியம் உள்ளதால்
ஞானப்பழமென்று ஆனாய் என
வேதியியல் விளம்பிற்று!!
அன்னை ஊட்டும்
அமுதுக்கு இணையாய்
அகப்பொருள் கொண்டேனென
அழகாய் புகழ்ந்தனரே
அறமறிந்த சான்றோரே!!
தொல்லையென நினைத்து
தொலைவெறியும் என்னுடைய
தோலதுவை உட்கொண்டால்
தோல்வியாதி நீக்குவேனேன
தெளிவாக சித்தம் கொள்க!!
புட்டுபோல என்னுள்ளே
புடம்போட்டு நான்வைத்த
பூப்போன்ற சதையதை
பூரிப்பாய் உட்கொண்டால்
புற்றுநோய் போக்கிடுவேன்!!
கருத்தாக எனக்குள்ளே
கவனமாக சேர்த்துவைத்த
கணச்செறிவு சத்தாலே
கண்பார்வை பெருகிடுமே
கவளமாக எனைக்கொண்டால்!!
பாங்காக ஊட்டமதை
பாருக்கு கொடுத்ததினால்
புசித்த மானுடரால்
பழங்களின் அரசனென
பட்டமதை பெற்றேனே!!
முன்னோர் காலத்தில்
மலர்விட்டு காயாகி
மரத்திலேயே தொங்கினாற்போல்
மணம்வீசி பழுத்திருந்தேன்!!
காலம் மாறிப்போனது
களைந்தனர் எனை
கருவோடு பிஞ்சிலே!
கார்பைடு கல் வைத்து
கடும்வெப்பம் வேகவைத்து
கனியாக மாற்றினரே!!
கால்சியம் கார்பைடெனும்
கருங்காலி அரக்கனவன்
காற்றின் ஈரப்பதம் கொண்டு
கிராதகன் அசெட்டிலீனை
கண்கசக்க என்மீது
கனமாக பாச்சினரே!!
பழமாக மாறிடவோர்
பத்துநாட்கள் எடுக்குமெனை
பத்துமணி நேரத்தில்
பழுத்துக் கனிந்திட
புறச்செயல் செய்தனரே!!
செயற்கையாக பழுத்த நானோ
செருக்காக சந்தையேறி
செய்முறை அறியாத
செங்குற்றம் புரியாத
நுகர்வோர் அகம் புகுந்தேனே!!
கனியுனை புசித்தாலே
கண்டபிணி தீருமென
கூறிவந்த அனைவருமே!
கடுகேனும் ருசித்திட்டால்
கடும்பிணி வருமென்ற
கடுஞ்சொல் வீச நானும்
கூனிக்குறுகிப் போனேனே!!
வங்கியில் பணமெடுத்து
வாங்கிவந்து உட்கொண்டால்
வாந்தி பேதியும்
வயிற்று எரிச்சலும்
வந்து துயர் பெற்றனரே!!
உன்னிலை உயர்வதற்கு
என் நிலை ஏன் மாற்றுகிறாய்?
உன் குடி வாழ்வதற்கு
மாற்றான் குடி ஏன் கெடுக்கிறாய்?
உனதருமைப் பிள்ளைகளும்
உன்னால் தருவித்த
எனைத்தான் உண்பார்களென
உனக்கேன் தெரிவதில்லை??!!
இயற்கையாய் பழுக்குமெனை
தடிபோட்டு அடிக்காதே!
செயற்கைவழி கண்டறிந்து
உன்குடி தொலைக்காதே!!
இச்செயல் தவறென்று
இயம்பி நிற்பதற்கு
இதற்கான சட்டங்கள்
இயைபோடு இருந்தாலும்
இச்செயல் இழிசெயலென
இன்றே உரைத்திடவோர்
கடும்சட்டம் போட்டிடுக!!
சத்தம் போடாது
சதிச்செயல் செய்வோரை
சம்மணம் போடவைத்து
சாட்டையால் அடித்திடவே
சக்கர வியூகம் அமைத்திடுக!!
அன்பன்
மகேந்திரன்