Powered By Blogger

Monday 1 August 2011

திறவுகோல் ஒன்று கொடு!!


ஆழிசூழ் அகிலத்தில்
அகத்தில் அகமின்றி
அகங்காரம் சிறிதின்றி
அறநெறி பிறழாது
அமிழ்தெனும் தமிழெடுத்து
திறம்பட கவியுரைக்க
திறவுகோல் ஒன்று கொடு!!

சிந்தையை சிக்கெடுத்து
சீரான கோணத்தில்
சீர்மேவும் பணிகளிலே
செயல்விளை ஏற்றிட
செங்கோல் தாங்கிட
செவ்வனே செயலூற்ற
கற்பனையே திறவுகோல்!!



ஆவலின் உச்சத்தில்
அறிந்த அமைதியில்
மயங்கிய மனதின்
இரகசியம் தேடுகையில்
வாய் மலரும் சொற்களை
மேவுமலை ஏற்றிடும்
மௌனமே திறவுகோல்!!

உணர்ச்சிப் பெருக்கினில்
அறிவின் ஆக்கத்தில்
ஊற்றெடுக்கும் வெற்றிக்கு
விரிந்த புவனத்தை 
சுருக்கிப் போடும்
தன்னம்பிக்கை சாரலின்
முயற்சியே திறவுகோல்!!


மாயை மரிப்பில்
சாயம் தொலைத்து
உவகை பூக்கும்
நெஞ்சின் ஆழத்து
பொங்கும் மகிழ்ச்சியின்
கள்ளச் சுவடிலா
அன்பே திறவுகோல்!!

தகுதியின் தரத்தில்
தரணியின் சிகரத்தில்
தனிக்கொடி ஏற்றி
சரித்திரம் படைத்திடும்
மனித நேயத்தின்
மாசிலா பண்பிற்கு
ஒழுக்கமே திறவுகோல்!!



நெஞ்சத்தின் சந்தத்தில்
நெடுங்காலம் குடியேற்று
பிஞ்சு மொழியாலே
கொஞ்சிக்குலவி வரும்
தீந்தமிழ் இலக்கியத்தின்
செந்தேன் சுவைக்கு
இலக்கணமே திறவுகோல்!!

புவியாளும் இறைவா!!
வேய்கூரை கவியுலகின்
மாளிகைச் சோலையில்
நற்பொருள் பொருந்திய
நல்லிலக்கியம் யாவுமே
கற்றுத் தெரிந்திட
திறவுகோல் ஒன்று கொடு!!

அன்பன்
மகேந்திரன்

24 comments:

கூடல் பாலா said...

வார்த்தைகள் அருவியாய் கொட்டுகின்றன ....உங்கள் கவிதையை வர்ணிக்க வார்த்தையில்லை !

நிரூபன் said...

வணக்கம் சகோ, ஒரு கவிஞனின் உள்ளத்தில் கவியாறு ஊற்றெடுத்துப் பாய வேண்டும் என்பதற்காக, நீங்கள் கலைத் தாயிடம் வரம் வேண்டி எழுதிய கவிதை- நிச்சயம் உங்கள் மன உணர்வினை, எதிர்பார்ப்பினை நிறைவேற்றும்.

kowsy said...

திறவுகோல் அத்தனையும் தெரிந்திருந்தும் ஆணிவேர் திறவுகோல் கிடைக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டியது சிறப்பே. வாழ்த்துகள

மாய உலகம் said...

//கற்பனையே திறவுகோல்!!
மௌனமே திறவுகோல்!!
முயற்சியே திறவுகோல்!!
அன்பே திறவுகோல்!!
ஒழுக்கமே திறவுகோல்!!
இலக்கணமே திறவுகோல்!!//

அழகான வரிகளாய் தொடுத்து இறைவனிடம் கேட்கும் உங்கள் இதயமும் ஒரு திறவுகோல்... இந்த பதிவும் மனதை வருடும் கவிதை என்கிற திறவுகோல்...அன்பர் மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்

M.R said...

அழகான வரிகள் ,
அன்பான உணர்வுகள்

அருமை நண்பரே
அருமை .

திரும்ப திரும்ப படிக்க தூண்டுகின்றன

kupps said...

தங்களின் தமிழ்ச்சொல்லாற்றல் கவிதையில் மிளிர்கிறது.வாழ்த்துக்கள்.

vetha (kovaikkavi) said...

கற்பனையே,
மௌனமே, முயற்சியே,
அன்பே,
ஒழுக்கமே, இலக்கணமே திறவுகோல்.
nalla vatikal ......
Vetha.Elangathilakam
http://kovaikkavi.wordpress.com

Anonymous said...

அருமை நண்பரே,

உங்கள் கவிதையும் அருமை...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல் பாலா
தங்களின் மென்மையான கருத்துரைக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

மகேந்திரன் said...

வணக்கம் நிரூபன் சகோ
தங்களின் வாழ்த்துரைக்கும்
மேன்மையான கருத்துரைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி சந்திரகெளரி
தங்களின் வாழ்த்துக்கும்
மேலான கருத்துக்கும் என் மனமுவந்த
நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு மாயுலக நண்பரே,
தங்களின் வாழ்த்து கருத்துரைக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அருமை நண்பர் எம்.ஆர்.
தங்களின் இயல்பான கருத்துரைக்கு
என் பணிவான வணக்கங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
உங்களின் வார்த்தைகள்
என்னை உரமேற்றுகிறது.
வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி வேதா.இலங்காதிலகம்.
தங்களின் மேலான கருத்துக்கு
என் பணிவான வணக்கங்கள்.

மகேந்திரன் said...

இனிய நண்பர் ரேவேரி
தங்களின் இனிய கருத்துரைக்கு
மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையாக கவிதை எழுதியிருக்கிறீர்கள்.
மனதை கவர்கிறது.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

ரத்னவேல் ஐயா
தங்களின் மேலான கருத்துக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஹேமா said...

ஆரம்பப் பந்தியை 2-3 முறைகள் வாசித்துவிட்டேன்.புரியாமல் அல்ல.அத்தனை தமிழ் நயம் !

Chitra said...

சிந்தையை சிக்கெடுத்து
சீரான கோணத்தில்
சீர்மேவும் பணிகளிலே
செயல்விளை ஏற்றிட
செங்கோல் தாங்கிட
செவ்வனே செயலூற்ற
கற்பனையே திறவுகோல்!!


....அழகு தமிழில், அருமையான கவிதை. பாராட்டுக்கள்!

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா
தங்களின் வர்ணனையான கருத்துக்கு
என் உளம் கனிந்த நன்றிகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி சித்ரா
தங்களின் பொற்பாதங்களை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் இனிய கருத்திட்டமைக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

கற்பனைத்திறவுகோல் அபாரம்.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

Post a Comment