கண்ணைப்பறிக்கும் வண்ணத்தாலே
கொண்டிபோட்டு இழுக்கிறாயே!
வண்ணத்திலே உனக்கிணையா
யாருமில்ல என்றுசொல்லி
சந்தைக்கு வந்தபின்னும்
பம்மாத்து காட்டுறியே!!
செஞ்சாந்து நிறத்தைப்போல
செம்பட்டு உடுத்திவந்து
சீமைக்கு வந்ததுபோல்
மந்தைக்கு நடுவிலே
மந்தாரக் கொண்டையோட
மஞ்சம்போட்டு மயக்குறியே!!
சிலுக்குப் பைக்குள்ளே
சில்லறைய போட்டுக்கிட்டு
சித்தார நடைபோட்டு
சின்னமனூர் தேர் போல
குலுக்கிநடை போட்டுவந்து
கிளுக்குன்னு சிரிக்கிறியே!!
பார்த்ததுமே மதிமயக்கும்
ரம்பைபோல இருக்குறியே!
சலசலன்னு மனமயக்கும்
வெள்ளிகொலுசு ஓசையெல்லாம்
தள்ளிபோக சொல்லிவிட்டு
எள்ளிநகை ஆடுறியே!!
பொண்ணுபார்க்க போகும்போது
சிவத்தபொண்ணு வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்பதுபோல!
வற்றல் வாங்க போனாலும்
வற்றல்பொடி வாங்க போனாலும்!
சிவப்புநிறத்தில் வேணுமின்னு
ஒத்தக்காலில் நிற்கிறோமே!!
சிவப்புநிறமா இருந்தாத்தான்
ஒசந்தவகை சரக்குன்னு
போக்கத்தவன் எவனோ
உன்காதில் சொல்லிவைக்க!
நிறம்நாடி நீ போனதும்
கலப்படம் அங்கே
அரிதாரம் போட்டுச்சய்யா!!
சூளையிலே சிதறுண்ட
செங்கல் சிதறல்களை
அள்ளிக் கொண்டுவந்து
அழகாக பொடிசெய்து
வற்றல்பொடியோடு கலந்து
நிறத்துக்கு நிறமாச்சு
எடைக்கு எடையாச்சுன்னு
இயங்கிய இதயமதை
கழற்றி வைத்துவிட்டு
வியாபாரம் செய்தனரே!!
அடுத்து யோசித்தான்
இரக்கமற்ற அரக்கனவன்!
அழிவுப் பாதைக்கு
ஆக்கமிகு அறிவியலை
அவனுக்காய் துணைக்கழைத்தான்!
வெகுளியாய் வேதியியலும்
மகுடிக்கு மயங்கி
உடன்போக்கு போச்சுதய்யா!!
பழுப்புநிற வற்றலையும்
சிவத்தநிறம் ஆக்கிவிட
"சூடான் ரெட்" எனும்
சூட்சும சாயப்பொருளை
சூத்திரம் கைகொண்டு
சூசகமாய் கலந்தனரே!!
"சூடான் ரெட்" கலந்ததுமே
புதுமணப் பெண்ணாக
புதுப்பொலிவு கொண்டதுபோல்
தன்னுள்ளே நஞ்சேற்றி
தளுக்குநடை சுந்தரியாய்
விற்பனைக்கு வந்ததய்யா !!
செழித்து நிற்கும் வண்ணமெல்லாம்
செயற்கையின்னு தெரியாம
வாங்கிவந்து உணவிலே
பக்குவமா போட்டனரே!
சாப்பிட்டு முடித்ததுமே
வயிற்றெரிச்சல் வாந்தியின்னு
பல நோய்கள் வந்ததுவே
பாழாய்ப்போன கலப்படத்தால்!!
மனசைக் கொஞ்சம் தேத்திகோங்க
நான் சொல்லும் சேதிகேட்டு!
"சூடான் ரெட்" வேதிப்பொருள்
மெல்ல மெல்ல உடல்புகுந்து
ரத்தத்தில் தான் கலந்து
மரபணு மூலக்கூறை
மாற்றி போடுதுன்னு
அறிவியல் சொல்லுதய்யா!!
அதுமட்டும் இல்லையப்பா
இதையும் கேட்டுகோங்க
உயிர்க்கொல்லி நோயான
கல்லீரல் புற்று நோயை
கமுக்கமாக வளர்க்குதுன்னு
காதிலே விழுந்துச்சய்யா!!
வெம்பாடு படுவதெல்லாம்
ஒருசாண் வயித்துக்குதான்!
சாப்பிடும் பொருட்களிலே
வியாபார நோக்கத்திலே
மனசாட்சி இல்லாம
கலப்படம் செய்றவனே!
உன்னைப்போல எல்லோரும்
கலப்படத்த செய்திட்டா
பசியின்னு வரும்போது - நான்
உண்ணும் பொருளெல்லாம்
உயிர்க்கொல்லியா மாறிப்போனா
என்னத்த நானும் திங்க??!
மண்ணைத் தவிர ஒண்ணுமில்ல!!
அன்பன்
மகேந்திரன்