Powered By Blogger

Tuesday, 10 April 2012

பின்னோக்கி ஓர் பயணம்!!


மிடுக்காக மின்னணுவியல்
மிளிர்ந்திருக்கும் போதிலும்!
தொய்வில்லா தொலைத்தொடர்பு
உச்சமிருக்கும் போதிலும்!
கற்காலம் தேடியிங்கே
பின்னோக்கி ஓர் பயணம்!!
 
யன்பாடுகள் பெருகுகையில்
உற்பத்தியே! நீ மிகைந்தால்!
நாகரீகப் பாதையில்
நானும் வளர்வேன் என
நாசூக்காய் சொல்லிக்கொண்டு
தட்டுப்பாடும் வளருதிங்கே!!
 

 


ன்று வாங்கினால்
ஒன்று இலவசமென!
பழையது கொடுத்து  
புதிதாய் பெற்றதென!  
வாங்கிவைத்த பொருளெல்லாம்
சிலந்தி வலைகளுக்கு  
தாக்கமாய் நின்றதிங்கே!!
 
காய்ந்த மரம் வெட்டி
விறகுக் குச்சியாக்கி
அடுப்பெரித்து வாழ்ந்தோரை!
காலத்தின் தன்மைக்கு
மாறிட அறிவுறுத்தி
இயற்கைவாயு தந்து எனை
இன்புறச் செய்தது ஓர் காலம்!!
 
 
நான்கு தூக்கு விறகுவாங்கி
வெயில்கண்டு உலரவைத்து!
எரிகையில் எரிச்சலூட்டும்
புகைச்சலின் பால்கொண்ட
வெறுப்பின் காரணமாய்!
மலர்ந்த முகத்தோடு
நானும் அதை ஏற்றுக்கொண்டேன்!!  




விழ்ந்து போன காலச்சூழலில்
பதிவு செய்திடுகவென  
தொலைபேசி விடுத்தாலோ!
இயற்கை வாயு வருவதற்கு
இன்னும் மூன்று மாதமென
புதிய கணக்கு சொல்கையிலே!
சுற்றிவந்தால் வட்டமென
இன்றுதான் புரிகிறது!!
 
 


சிறுதடியின் முகப்பில் 
மல்லுத்துணி கட்டி
சிக்கிமுக்கி கல் தேய்த்து
வந்த நெருப்பினால்
எரிய வைத்தும்!
மின்மினிப் பூச்சிகளை 
கண்ணாடிக் குடுவைக்குள் 
அடைத்து வைத்தும்  
வெளிச்சம் கொண்டு வந்தோம்
அதுவும் ஓர் காலம்!!
 
 
சிறிதாக அகல்விளக்கும்
பெரிதாக அரிக்கேனுமென 
எரியும் எண்ணெய் கொண்டு
விளக்குத் திரியேற்றி
உரசிப் பற்றவைக்கும்
தீப்பெட்டி துணைகொண்டு
வெளிச்சம் கொண்டு வந்தோம்
பின்னர் ஓர் காலம்!!
 
 
றிவியல் வளர்ந்ததப்பா
விட்டிற் பூச்சியாய்
வீட்டிற்குள் அடங்காது
புறம் வந்து பார்த்திடப்பா! - என
கண்ணுக்கு தெரியாது
கம்பிக்குள் சக்தியை
சந்துக்குள் கொண்டுவந்து
பளபளப்பாய் வெளிச்சம் காட்டி
திகைக்க வைத்ததோர் காலம்!!
 
 
கல் விளக்கை புறம் எறிந்து
மின்சக்தி அகம் கொணர்ந்து
சொகுசான வாழ்க்கைக்கு
அடித்தளம் போட்டுவைத்தேன்!
குலவி நின்று உரல் ஆடுவதை
வாங்கி வைத்து
உரல் நின்று குலவி ஆடியதை
தொலைவில் எறிந்தேன்!!
 
டம் புரண்ட காலம்
கதையிங்கே சொல்கிறது!
காணமுடியா மின்சக்தி 
கண்மறைந்து போனதாம்!
பெருகிவரும் மக்கட்தொகையால் 
உற்பத்தி போதாது 
தட்டுப்பாடு வந்ததாம்!!
 
 
தொலைவெறிந்த அகல்விளக்கு 
இன்றோ! அகத்தில் 
மறுபுகுத்தலாய் மாடத்தில்!
கைதேர்ந்த சிற்பிகளோ 
அரைக்கும் அம்மிக்கல்லையும் 
ஆட்டும் ஆட்டு உரலையும் 
நுணுக்கமாய்  செதுக்கி
கலைவண்ணம் செய்துவரும்
காலமிது இக்காலம்!!
 
 
பாமரப் பருவம்விட்டு
படித்தறிந்த பின்னும்
தட்டுப்பாடு பெருகிடவே!
விஞஞான கால்ம்விட்டு
மெதுவாய் கால்பரப்பி
பின்னோக்கி செல்கிறேன்
கற்காலம் நோக்கி!!
 
 
ட்டுப்பாடு இங்கே
தானாக வந்ததோ?
ஆளும் வர்க்கத்தோர்
தனித் திறம் காட்டி 
தரம் உயர்த்தத் தவறிவிட்டு  
பசப்பு வார்த்தைகள் பேசி 
செய்த தவறுகளை
தவளை உருவாக்கி
கிணற்றில் அடைக்கின்றனரே!!
 
 
ளர்ச்சிப் பாதையில்
தட்டுப்பாடெனும் அரக்கன்
நுழைந்திட காரணம் யார்??!!
மக்கட் தொகை பெருக்கமோ??
ஆக்க வழிகளில் 
அழிவின் சக்தியைக் கொணர
ஆள்வோர் நடத்தும் நாடகமோ??
விழிப்புணர்வு இன்றி
வீணாக பயன்படுத்தி 
இன்று விழிபிதுங்கும்
நுகர்வோரின் குற்றமோ??!!
 
 
 
அன்பன் 
மகேந்திரன்
 
 

Friday, 6 April 2012

இலையே ....நீ....இலை தானா??!!







ங்கம் வளர்த்த தங்கத்தமிழின்
நுங்குச் சுவையை!
எண்ணித் திளைக்கையிலே
இன்னுயிரும் ஆங்கே
தன்னிலை மறந்துபோகும்!! 
 
ன்னுயிர் தீந்தமிழே
உன்னில் நானோ
சொற்சுவை வியந்திடவா?!
பொருட்சுவை வியந்திடவா?!
சொல்லும் பொருளும் கலந்த
மொழிச்சுவை வியந்திடவா?!!
 

 


பொருளுக்கும் உறவுக்கும்
ஏனைய மொழிகள்
ஒற்றைச் சொல்லால் அடக்குகையில்!
அங்கனம் அல்ல தமிழா!
ஒன்றனுக்கு பலசொல் உண்டென
நீ கூற நான் வியந்தேன்!!
 
தாவர உடற்கூற்றில்
பச்சையத்தை மேனியில்
தாங்கிநிற்கும் இலைகளுக்கும்
பலசொல் உண்டா என ?
பாங்காக வினா தொடுத்தேன்!
உண்டென இயம்பி
என்னறிவு புகுத்தினாய்!!
 
 
வாழையடி வாழை என
உவமை பெற்ற வாழையும்!
அகலக் கிளைபரப்பி
மண்ணையும் வளமேற்றி
தன்னையும் வளமேற்றும்!
மரங்கள் கொண்டதெல்லாம்
இலைகள் என அறிந்திடுக!!
 
 
புவியின் மேற்பரப்பை
கொழுகொம்பாய்க் கொண்டு!
வளர்ச்சியில் எல்லையற்று 
புவி ஈன்றதோ?! தான் ஈன்றதா?! என 
அறிந்திட இயலா  
கைகளை ஈன்றுவக்கும்
கொடிகள் கொண்டதெல்லாம்
பூண்டு என அறிந்திடுக!!
 
 
டையற்று நிர்மலமாய்
உவர்நீர் வடித்தவளை!
பச்சை பட்டு போர்த்தி
மானம் காக்கும் நன்மகவாய்!
இடைவெளி சிறிதின்றி
புவிப்பரப்பில் வளர்ந்திடும்
கோரை அருகு கொண்டதெல்லாம்
புல் என விளங்கிடுக!!
 
 


டினத்தின் உவமைக்கு
இயற்கைப் பொருளாய் அமைந்த!
நிலமகளின் மேனியிலே
வீக்கம் கொண்டது போலவாம்!
மலைகளின் வாசத்தில்
வேர்களை ஊடுருவி
வானுயர வளர்ந்து நிற்கும்!
பெரும் விருட்சங்கள் கொண்டதெல்லாம்
தழை என இயம்பிடுக!!
 
 


மானுடப் பிறப்பின்
வாழ்வின் நிலைப்பாட்டிற்கு
அடிப்படைத் தேவையாம்!
பசிக்கையில் புசித்திட
உழவனெனும் இறைவன் படைத்த!
நெல் கேழ்வரகு எனும்
தானியங்கள் கொண்டதெல்லாம்
தாள் என அறிந்திடுக!!
 
 
வானுயர்ந்து வளர்ந்து
உச்சிக்கு மேலே  
உயரக் குடை பிடித்தாற்போல்!
தான்கொண்ட பாகங்கள் 
சிறிதேனும் மீதின்றி 
தனைவளர்த்த மனிதனுக்காய் 
ஈந்து இன்பம் பெரும்!
தென்னை பனை கொண்டதெல்லாம் 
ஓலை என விளங்கிடுக!!
 
 
சாலை ஓரங்களில் 
கேட்பதற்கு ஆளின்றி 
இங்கு நான் கண்டதெல்லாம் 
எனது தேசமென!
பரந்து விரிந்து வியாபித்து
வளர்ந்து குவிந்திருக்கும் 
சப்பாத்தி தாழை கொண்டதெல்லாம் 
மடல் என இயம்பிடுக!! 


யர உயர வளர்ந்தும் 
உடல்பருமன் சிறுத்தும்!
வாழ்வினில் சிலநிலை கடக்க
இதைப்போல் வளைந்துகொடென
பெயர்பெற்ற நாணலும்!
தோலின் வண்ணம் கருத்திருப்பினும்
கொண்ட உடல்முழுதும்
வளர்த்தவனுக்கு இன்முகத்தோடு!
இனிக்க இனிக்க உணவை மாறும்
கரும்பினம் கொண்டதெல்லாம்
தோகை என விளங்கிடுக!!
 
 


சிறிய மரமெனினும்
சின்னஞ்சிறு செடியெனினும்
விதைத்திட்ட சிலநாளில்
விதைகீறி துளிர்த்து
பச்சையத்தை தன்னுள்ளே
இச்சையாய் பூண்டிருக்கும்
அகத்தி பசலை மணல்தக்காளி
ஆகியவை கொண்டதெல்லாம்
கீரை என இயம்பிடுக!!


 
அன்பன்
மகேந்திரன்  

Wednesday, 4 April 2012

பொய்க்கால் குதிரை ஆட்டம்!!






பாய்ந்தோடும் குதிரைமேல
பக்கத்தில ராணியோட
பார்முழுதும் சுத்திவரும்
வருசநாட்டு வேந்தன் - நானும்
வருசநாட்டு வேந்தன்!!

தொந்தி வயிற்றோனை
தெண்டனிட்டு வணக்கிபுட்டு
பரியேறும் மன்னவன் நான்
தென்காசிச் சீமை - ஆமா
தென்காசிச் சீமை!!




சிவகிரி சின்னமாமன்
செல்லமாக பெத்தபுள்ள
என்னோட ராணியாக
அரசாள வந்தா - இப்போ
அரசாள வந்தா!!

காத்திருக்கும் ராசாத்தியை
ரோசா போல கூட்டிக்கிட்டு
ஊர்வலந்தான் போகப்போறோம்
நெல்விளையும் சீமை - ஆமா
நெல்விளையும் சீமை!!




திற்பரப்பு அருவியிலே
தீர்த்தமாடி வந்தபின்னே
தம்பதியா போகப்போறோம்
திருவையாறு பூமி - வாங்க
திருவையாறு பூமி!!

கால்களில் கட்டைகட்டி
விடமுள்ள பூச்சிகளை
அழிக்கப் பிறந்ததுதான்
மரக்காலாடல் ஆட்டம் - ஆமா
மரக்காலாடல் ஆட்டம்!!




புராணத்தில் இருந்துவந்த
இந்தவகை ஆட்டமதை
பொய்க்காலு குதிரையாக்கி
தந்தவர்தான் ஐயா - திருவையாறு
இராமகிருட்டிணன் ஐயா!!

குதிரை வடிவுடைய
கூடு ஒன்னு கட்டிக்கிட்டு
மரக்காலில் ஆடிவந்த
ஆட்டமிந்த ஆட்டம் - இது
பொய்க்கால்குதிரை ஆட்டம்!!




சாக்கு பிரம்புக்கம்பு
இரும்புத்தகடு கொண்டு
புளியங்கொட்டை பசையெடுத்து
ஒட்டி செஞ்ச குதிரை - இந்த
ராசாராணி குதிரை!!



பொய்க்காலு என்பதிங்கே
மாமரக் கட்டையப்பா
ஒன்னரை அடியளவு
பொய்க்காலுக்  கம்பு - இது
பொய்க்காலு கம்பு!!



பொய்க்காலு இல்லாம
காலிலே சலங்கை காட்டி
ஆடுகின்ற ஆட்டமது
பொய்க்குதிரை ஆட்டம் - ஐயா
பொய்க்குதிரை ஆட்டம்!!

குதிரைக் கூடெடுத்து
தோளிலேதான் தொங்கவிட்டு
நையாண்டி மேளத்தோட
ஆடிவந்தோம் நாங்க - ஆமா
ஆடிவந்தோம் நாங்க!!




ம்பை கிடுகிட்டி
தவிலோடு கோந்தளமும்
அடவுகள் பலகட்டி
குதிரையோட்டி வந்தோம் - நாங்க
குதிரையோட்டி வந்தோம்!!

தேசமில்லா அரசன் நானோ
அரசியோடு கூத்துகட்டி
ஊரெல்லாம் சுத்திவந்து
கலைய வளர்த்துவந்தோம் - ஆமா
கலைய வளர்த்து வந்தோம்!!




குதிரையும் காணவில்லை
கூத்துக்களும் தெரியவில்லை
வளர்த்துவைச்ச கலைகளெல்லாம்
போன இடம் எங்கே  - ஆமா
போன இடம் எங்கே?!!



அன்பன்
மகேந்திரன் 

Sunday, 1 April 2012

ஏனிந்த உவகை?!!







ப்பப்பா!
எத்தனை ஆனந்தம்
உன் உவகையில்!
உலகையே புரட்டிவிட்டது போல்
எத்தனை இன்பம்
உன் களிப்பில்!!!

வெற்று வெள்ளிக் குடமதை
கவிழ்த்து வைத்து
குலுக்கியது போல
கலகலவென நகையொலியை
சிதறவிட்டதும் ஏன்தானோ?!!





காந்தள் மலர்க்
கண்களும் சிரிக்க
கைகள் கொட்டி - நீ
சிரிப்பொலி சிந்துவதன்
நற்பொருள் அறிந்திட
நாளும் விழைகின்றேன்!!
 

மின்னல் கீற்றுகளாய்
பளிச்சென்ற பால் நிலவாய்
வெட்டிவெட்டி நகைக்கும்
உன் சிரிப்பின்
பொருள் தான் என்ன?!!
 

 


ழலை உந்தன்
தோழமைக் குழாமுடன் 
மயக்கும் விழியாலே
மாயங்கள் புரிந்தது போல்
மந்திரப் புன்னகை ஏன்?!!
 
கத்திப்பூ இதழதை
அகல விரித்து
உவப்பு கொள்கையிலே
விளங்காமல் விழிக்கிறேன்
விழிநிறைய வினாக்களுடன்!!
 
 
சிந்தாமணிச் சித்திரமே
காண்டா மணிவிளக்கே!
கோலவிழிப் பார்வையில்
கேளிக்கை கண்டதுபோல்
கெக்கலிப்பு கொண்டது ஏன்?!!
 
தேன்கொண்ட விரிமலராய்
உன்னுவகை தெரிந்தாலும்
சிந்தையின் சுவருக்குள்
கண்டிராத ஓர் மாற்றம்
ஏனென்று விளங்கவில்லை!!
 
 
விதிமீறல் அறியாது
வாழ்வின் நிலைப்புக்காய்
பரபரப்பாய் ஓடியோடி
திரும்பிப் பார்க்கையில்
பாதிவாழ்க்கை தொலைத்திருந்தேன்!!

சிரிப்பென்ற பொருளுக்கு
பல சொற்கள் இருந்தாலும்
ஏதேனும் ஒருசொல்லை
ஏறெடுத்து பார்ப்பதற்குள்
முன்நெற்றி ஏற்றம் கண்டேன்!!
 
 


ட்டுமேனிப் பெட்டகமே உவகை என்பது
உனக்கு இயல்புதான்
அதைக்காணும் எனக்குத்தான்
விகற்பமாய் ஆனதிங்கே!! 





ன்ன இங்கு நடந்தாலும்

உன்னுவகை தொலைக்காதே!
அதை அரூபமாய்
மறைய வைத்து
உன்னியல்பு மாறாதே!!
 
ன் வினாக்கள் கண்டு
நெஞ்சம் புழுங்காதே!
என் நிலையை உனக்கு
எப்படி நான் சொல்ல?!
காமாலைக் கண்ணுக்கு
காண்பதெல்லாம் மஞ்சள்தானே!!
 
 
அன்பன்
மகேந்திரன்