Powered By Blogger

Saturday 23 July 2011

தொடுவானம் தொட்டுவிடு!!






கருவறையில் கருங்குஞ்சாய்
அடைபட்டுக் கிடந்தாலும்
குறைவேதும் இல்லாமல்
நெறிமுறைகள் கற்றுவிடு!!
நெறிமுறையின் வழியதிலே
வளமாக வாழ்ந்துவிடு!!

வந்ததுயர் ஏதெனினும்
துவண்டு மட்டும் வீழாதே
துள்ளி எழுந்துவிடு!
துணிவுடன் நடைபயில்
நடைபாதை இலக்காய்
வெற்றியினை வைத்துவிடு!!




பொங்கிவரும் உன்னுணர்வை
மதகிட்டு அடக்காதே!
மடைதிறக்கும் வெள்ளமென
பலதிசைக்கும் திறந்துவிடு! 
கட்டற்ற காட்டாறு போலன்றி
கரையடங்கும் நல்நதியாய்
நற்குணங்கள் சமைத்துவிடு!!

வெற்றுக்காகிதமாம் உன்வாழ்வில்  
இகழ்ச்சிகளை உதறிவிட்டு
எண்ணங்கள் எனும் வண்ணத்தில்
நம்பிக்கை எழுதுகோலில்
முயற்சியெனும்  மைகொண்டு
வெற்றியை உருவேற்றும் 
தகுதியை வளர்த்துவிடு!!




போகின்ற நெடும்பயணத்தில்
ஆயிரம் தடைகள் தான்!
முடையிடும் முட்டுக்கட்டைகளை
பட்டுச்சட்டையாய் ஆக்கிவிடு!!
தளர்ந்துவிடா முயற்சியுடன்
தடைகள் தாண்டி முன்னேறி
வாகைக்கொடி ஏற்றிவிடு!!

சிரமத்தை ஏற்றுவிக்கும்
சிக்கல்கள் சிலகோடி!
சிக்கலைப் பிரித்தெடுக்க
சிரத்தையுடன் போராடு!
தூரமெல்லாம் அதிகமில்லை
தொடுவானம் தொட்டுவிடு!!





நெடுந்தூரக் களப்பயணம்
மூச்சு வாங்க வைத்துவிடும்!
இலட்சியத்தை நெஞ்சிலிருத்து!
நேற்றைய இருள்விலக்க
நாளைய வழிதெரிய
இன்றைய முயற்சியெனும்
அகல்விளக்கு ஏற்றிவிடு!!

தொடர்ந்துவரும் கணைகளாய்
பிரச்சனைகள் ஏராளம்!
மனமொடிந்து போகாமல்
அறிவெனும் கேடயத்தால்
அறப்போர் நடத்தியிங்கே!
நெறிபிறழா வாழ்வதனை
நேர்மைபட வாழ்ந்துவிடு!!


அன்பன்
மகேந்திரன்

34 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

சிறப்பு நண்பரே.

நம்பிக்கையூட்டும் வாசகங்கள் - அதுவும்
நல்வழியில் நடக்கவேண்டும்

என்ற அறவுரையுடன்...

தூரமெல்லாம் அதிகமில்லை
தொடுவானம் தொட்டுவிடு!!

படத்தோடு காட்டிய பாங்கு - அருமை

//தொடர்ந்துவரும் கணைகளாய்
பிரச்சனைகள் ஏராளம்!
மனமொடிந்து போகாமல்
அறிவெனும் கேடயத்தால்
அறப்போர் நடத்தியிங்கே!
நெறிபிறழா வாழ்வதனை
நேர்மைபட வாழ்ந்துவிடு!!//

நிச்சயமாக தங்கள் சொல்படி நடந்தால்
வாழ்வில் ஏமாற்றமே வராரது.

மாற்றத்தோடு ஏறுமுகத்தோடு
வாழலாம்.

நன்றி.

vetha (kovaikkavi) said...

சகோதரர் சிலர் 4 வரியில் எழுதி இதென்னடா என்று கூற வைக்க நிங்களோ அளவோடு தராது மேலதிகமாக தருகிறீர்கள். அளவோடு தரலாமே! என்றாலும் வாழ்த்துகள் நல்ல வரிகள்.
vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

M.R said...

நல்வழி காட்ட நம்பிக்கையூட்டும் வரிகள்.

உணர்வுள்ள கவிதை அருமை நண்பரே

கூடல் பாலா said...

நல்ல (அறிவுரை ) கவிதை !

அம்பாளடியாள் said...

தொடர்ந்துவரும் கணைகளாய்
பிரச்சனைகள் ஏராளம்!
மனமொடிந்து போகாமல்
அறிவெனும் கேடயத்தால்
அறப்போர் நடத்தியிங்கே!
நெறிபிறழா வாழ்வதனை
நேர்மைபட வாழ்ந்துவிடு!!

அருமை அருமை அருமை சகோ
இது கவிதையெனத் தவழ்ந்துவந்த
நல் அறிவுரைகள்.வாழ்த்துக்கள் .
நீங்கள் எனக்கு இட்ட அன்புக் கட்டளையைத்
தொடர்ந்துவிட்டேன் .என் பணி சிறக்க வந்து
வாழ்த்துங்கள்..............மிக்க நன்றி இப் பகிர்வுக்கு .

நிரூபன் said...

வணக்கம் சகோ, சிறியதோர் இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

வாழ்வியலுக்குத் தேவையான பல விடயங்களை, வாழ்வில் எம் ஒவ்வோர் அடிகளையும் முன்னோக்கி வைக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கி, ஒரு தத்துவக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க. அருமையான கவிதை.

குணசேகரன்... said...

சிரமத்தை ஏற்றுவிக்கும்
சிக்கல்கள் சிலகோடி!
சிக்கலைப் பிரித்தெடுக்க
சிரத்தையுடன் போராடு! //எனக்கு பிடித்த வரிகள்
அனைத்தும் படத்துக்கு ஏற்ற வரிகள்..நல்லதொரு தன்னம்பிக்கை கவிதை...அருமை..மேலும் நிறைய எழுதுங்கள்.. நலம் விசாரித்தமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே..!

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்
தங்களின் விரிவான கருத்துரைக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கவிதை வேதா.இலங்காதிலகம்

தங்களின் கருத்துரைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
சிலர் குறுங்கவிதைகளில் சாதனை படைக்கிறார்கள்.
நான் எழுதுவது குறுங்கவிதை அல்லவே..
நிச்சயம் குறுங்கவிதை எழுதுகையில் உங்கள்
கருத்துப்படி நடந்துகொள்கிறேன்.
மற்றபடி முடிந்த அளவு அடுத்த படைப்பிலிருந்து
அளவோடு தர முயற்சிக்கிறேன்.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
தொடர்ந்து வாருங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.
தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி அம்பாளடியாள்

தங்களின் மேன்மையான கருத்துக்கு
மிக்க நன்றி.
உங்களின் தொடர் பதிவு படித்தேன் சகோதரி...
அருமை அருமை..
அழைத்தவுடன் வந்து பதிவு செய்தமைக்கு
கோடானுகோடி நன்றிகள்.
மேலும் மேலும் உங்கள் படைப்புகள் செழிக்க
வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
எம்மை மறவாமல் சிறிய இடைவெளியாயினும்
தவறாமல் வந்து மேன்மைமிகு கருத்துரைத்தமைக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குணசேகரன்

தங்களின் பொன்னான கருத்துரைக்கு
மிக்க நன்றி.
நிச்சயம் நண்பரே..
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.

kowsy said...

அடுத்தவர் மனம் மகிழும் போது அதன் அலைகள் ஏதோ வகையில் எம்மை வந்தடைகின்றது. பாராட்டல் பண்பு வளரும் போது எமக்குள் இருக்கும் மமதை மறைந்து போகின்றது. தேவையான பதிவை எப்போதும் தேடி வந்து தரும் உங்கள் பண்புக்கு வாழ்த்துகள

Anonymous said...

உணர்வுள்ள கவிதை நண்பரே...

மகேந்திரன் said...

அன்புத் தோழி சந்திரகௌரி

தங்களின் பொற்பாதத்தை வசந்தமண்டபத்தில்
பதித்தமைக்கும் மேலும் மேன்மையான
கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழர் ரேவேரி

தங்களின் மேலான கருத்துக்கு
மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

மாலதி said...

//தொடர்ந்துவரும் கணைகளாய்
பிரச்சனைகள் ஏராளம்!
மனமொடிந்து போகாமல்
அறிவெனும் கேடயத்தால்
அறப்போர் நடத்தியிங்கே!
நெறிபிறழா வாழ்வதனை
நேர்மைபட வாழ்ந்துவிடு!!//உணர்வுள்ள கவிதை

மகேந்திரன் said...

ஐயா ரத்னவேல் அவர்கள்

தங்களின் பொற்பாதத்தை இங்கு பதித்தமைக்கும்
அழகான கருத்திட்டமைக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி

தங்களின் வருகைக்கும்
இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி,

vidivelli said...

//நெடுந்தூரக் களப்பயணம்
மூச்சு வாங்க வைத்துவிடும்!
இலட்சியத்தை நெஞ்சிலிருத்து!
நேற்றைய இருள்விலக்க
நாளைய வழிதெரிய
இன்றைய முயற்சியெனும்
அகல்விளக்கு ஏற்றிவிடு!!//

ஆகா!! எல்லாமே உடைந்துபோன இதயத்தை ஒட்டுவதாய் இருந்தது உங்கள் கவிதை..
அருமை....அற்புதமான வரிகள் மனம் முழுதும் நிறைந்தது..
வாழ்த்துச்சொல்ல வார்த்தைஇல்லை உறவே..

ஹேமா said...

நம்பிக்கை,உற்சாகம்,துணிவு தரும் வார்த்தைகள் !

மாய உலகம் said...

//நெடுந்தூரக் களப்பயணம்
மூச்சு வாங்க வைத்துவிடும்!
இலட்சியத்தை நெஞ்சிலிருத்து!
நேற்றைய இருள்விலக்க
நாளைய வழிதெரிய
இன்றைய முயற்சியெனும்
அகல்விளக்கு ஏற்றிவிடு!!//

விரக்தியிலிருக்கும் மனதை மீண்டும் உரமேற்ற வைத்துவிடும் கவிதை... அருமை

மாய உலகம் said...

//முடையிடும் முட்டுக்கட்டைகளை
பட்டுச்சட்டையாய் ஆக்கிவிடு!!//

வரிகளில் புதுமை. அருமை

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
உற்சாகமூட்டும் வண்ணம் அழகுக் கருத்து
கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி ஹேமா

உங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

மாய உலகத்தினின்று என் நட்பே

தெம்பூட்டும் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் மகேந்திரன் சார்! எப்படி இருக்கீங்கள்!

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்! உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நட்புடன் - ஆசிரியர் சிந்திக்கவும்.நெட்.

மகேந்திரன் said...

தினமும் சிந்திக்க வைக்கும் சிந்திக்கவும் வலைப்பூ ஆசிரியரே,

தங்களின் வாழ்த்துக்கள் என் சிரமேற்கொண்டு பணிசெய்கிறேன்.
தங்களின் வரவுக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown said...

மறந்துபோச்சு நண்பா

மகேந்திரன் said...

மறந்ததை நினைவூட்டத்தான் இக்கவிதை நண்பர் மோகன் அவர்களே,
தங்களின் பொற்பாதத்தை இங்கு பதித்தமைக்கும் இனிய
கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

அழகிய கவிதைகள் இரண்டுக்கும் இந்த சகோதரியோட
தமிழ்மணம் ஓட்டுக்கள் போட்டாச்சு ......

Post a Comment