Powered By Blogger

Monday 25 July 2011

களையெடுக்கப் போகையிலே!!






வைகறை கவிழ்ந்திருச்சு
கீழ்வானம் செவந்திருச்சு
களத்துமேட்டில் நின்று
கருத்தசேவல்  கூவிருச்சு!!

ஆளுக்கொரு ஆலங்குச்சி
விரலிடுக்கில் வைச்சிகிட்டு
ஆலங்குச்சி கிடைக்கலேன்னா
வேலங்குச்சி எடுத்துக்கிட்டு
கம்மாக்கரை ஒதுங்கிடுவோம்
சும்மா கதை பேசிகிட்டு!!




செப்புப்பானை தவளைப்பானை
செருக்கிடுப்பில் தூக்கிகிட்டு
கெண்டைக்காலு கொலுசுசத்தம்
தெம்மாங்கு பாட்டுப்பாட
ஊரோர நீராவிக்கு
ஊர்வலமா போனோமய்யா!!

ஒருசோத்து பெண்கள்கூடி
ஓராயிரம் கதைபேசி
வெண்கலத் தூக்குலதான்
கேப்பக்கஞ்சி எடுத்துகிட்டு
ஊர்முழுசும் நிறைஞ்சிருக்கும்
நெல்விளையும் நிலமெங்கும்
களையெடுக்கப் போகையிலே!!




உரம்போல உடம்பிருக்க
உலக்கைப்போல கையிருக்க
களத்துமேட்டு காவல்விட்டு
கமலையேற்றம் ஏறும்போது
கடைக்கண்ணு பார்வையாலே
சுண்டிபோட்டு இழுத்தாரே
சண்டிமாடு அடக்கிவைக்கும் 
செவளைக்காளை பொன்னுமச்சான்!!

ஊரோரம் தோப்பிருக்கும்
தோப்பெல்லாம் மரமிருக்கும்!
வானந்தொட வளர்ந்திருக்கும்
வேப்பமரக் கிளையிலதான்
கயத்தாலே ஊஞ்சல்கட்டி
வக்கனையா ஆடயில!
வேகாத வெயிலில
வேர்வைசிந்த உழைச்சிவந்த
களைப்பெல்லாம் போயிருச்சு!!




சொந்த நிலமில்லை
சொகுசான வாழ்க்கையில்லை
ஒண்டு குடிசையில
உறவுகள் அத்தனையும்
சேர்ந்து உறவாடி
நிம்மதியா வாழ்ந்திருந்தோம்!!

கால்வயித்து கஞ்சிகூட
சிரமப்பட்டு குடிச்சாலும்
சுத்தமான காத்துவந்து
எம்மனச தாலாட்டும்
பசபசக்கும் பூமியில
பவுசுக்கதை பேசிகிட்டு
ஒத்துமையா வாழ்ந்திருந்தோம்!!




நாங்க சிரமப்பட்டாலும்
புள்ளைகள படிக்கவைச்சோம்
புத்திசாலிப் பிள்ளைகளும்
பக்குவமா படிச்சுதைய்யா!
வேலைகளின் சோழிக்காக
பட்டணத்தின் புழுதிக்காட்டில்
பிரவேசம் ஆனதைய்யா!!

பளபளன்னு இருக்குதையா
பளிங்கு போல இங்கு எல்லாம்!!
எங்கூரு பனைமரம்போல்
வீடு எல்லாம் பெருசைய்யா!!
காசுபணம் விட்டெறிஞ்சா
கேட்டதெல்லாம் கிடைக்குதைய்யா
எங்கூரு வேப்பங்காட்டு - நல்ல
காத்து மட்டும் கிடைக்கலைய்யா!!







நான் பெத்த செல்லமக்கா
வேணாமடி எனக்கிந்த பட்டணம்!
மூச்சுகாத்த காசுகொடுத்து வாங்க
நான் பண்ணையாரு இல்லையப்பா!
ஊசிமுனை அளவுகூட
பச்சைநிலம் பார்க்கவில்ல
வாசதெளிச்சு கோலம்போட
ஒருசதுர நிலம்கூட தெரியவில்ல!
நான்போறேன் என் ஊரு
விளஞ்சிவந்த வயக்காட்டில்
நாலு களை பிடுங்கினாத்தான்
இந்த சென்மம் செஞ்ச பாவமெல்லாம்
புண்ணியமா போகுமய்யா!!



அன்பன்
மகேந்திரன்

41 comments:

மாய உலகம் said...

முதல் ரசிகன்

மாய உலகம் said...

கிராமத்து நடவு பாட்டு பின்னுது போங்க

மாய உலகம் said...

//விளஞ்சிவந்த வயக்காட்டில்
நாலு களை பிடுங்கினாத்தான்
இந்த சென்மம் செஞ்ச பாவமெல்லாம்
புண்ணியமா போகுமய்யா!!//

விவசாயத்தை நேசிக்ககூடிய அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள் நண்பா...

rajamelaiyur said...

Super kavithai

rajamelaiyur said...

Kalakkal kavithai

Anonymous said...

மகேந்திரன்....நம்ம ஊர்ல உப்பு மட்டும் தானே உண்டு....
தாமிரபரணி பக்கம் போனீங்களா?

சிறப்பு...வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

ஊரோரம் தோப்பிருக்கும்
தோப்பெல்லாம் மரமிருக்கும்!
வானந்தொட வளர்ந்திருக்கும்
வேப்பமரக் கிளையிலதான்
கயத்தாலே ஊஞ்சல்கட்டி
வக்கனையா ஆடயில//

நினைக்கும் போதே தென்றலாய் மகிழ்விக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கூடல் பாலா said...

இருக்கும் கொஞ்ச நஞ்சம் வயல் வெளிகளும் இன்னும் எத்தனை நாளைக்கோ ......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு கிராமத்தின் முழு மண்வாசைளையையும் தக்கவைத்து படிப்ப்பவலர்களை சுண்டியிழுக்கிறது...


கவிதையில் இன்றைய யதார்த்தம் மற்றும் அவலத்தைசுட்டிக்காட்டி விழிப்புணர்வு தந்துள்ளீர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிறப்பான சிந்தனை..
வாழ்த்துக்கள்...

மகேந்திரன் said...

மாய உலகத்தினின்று எமை வாழ்த்த வந்த
அன்பு நெஞ்சத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜா
தங்களின் வரவுக்கும் இனிய கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரேவேரி
நீங்கள் சொல்வது நிஜமே
எம்மூரைச் சுற்றிலும் உப்பளம் தான்.
நான் வசிக்கும் இடம் தூத்துக்குடியைத் தாண்டி
பத்து கிலோமீட்டர் தொலைவில்.
இங்கு நீங்கள் வந்தாள் உங்கள் மனது கொள்ளைகொள்ளும்
அளவுக்கு வாழைத்தோட்டங்கள் நிறைந்து இருக்கின்றன.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

மகேந்திரன் said...

அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி
தங்களின் ஊக்கமளிக்கும் பாராட்டுகளுக்கு
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா
சரியாச் சொன்னீங்க
இருக்கும் நிலங்களையாவது
பாதுகாக்கவேண்டும்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் சௌந்தர்
தங்களின் வாழ்த்துரையோடு வந்த
கருத்துக்கள் என்னை மெருகூட்டுகிறது.
நன்றி.

M.R said...

- நல்ல
காத்து மட்டும் கிடைக்கலைய்யா!!

கவிதை படித்துக்கொண்டு வரும்போதே இந்த வரியை விமர்சனமா போடணும்னு நினைத்தேன் , நீங்களே அந்த வார்த்தையை உபயோகித்துள்ளீர்கள்.

பிரிட்ஜ் போன்ற சாதனங்களும் ,புகை விடும் வாகனங்களும் ,
பட்டணத்தில் நிறைந்திருக்கையிலே எங்கே போவது நல்ல காத்துக்கு .

சக்தி கல்வி மையம் said...

மண்வாசனை மிகுந்த கவிதை,,
அருமை..

M.R said...

சொந்த நிலமில்லை
சொகுசான வாழ்க்கையில்லை
ஒண்டு குடிசையில
உறவுகள் அத்தனையும்
சேர்ந்து உறவாடி
நிம்மதியா வாழ்ந்திருந்தோம்!!


உழைத்து வந்த கழைப்பினிலே
உறக்கம் தானா வரும் ,பட்டினத்தில்
உழைக்கவும் நேரமில்லை உடல்
உழைக்கவும் தேவையில்லை
சொகுசாக வாழ்ந்தாலே பல
சோதனைகள் உடலுக்கு
வேதனைகள் மனதுக்கு
கிராமத்து வாழ்க்கை தான்
நிம்மதி தரும் இரண்டுக்குமே

M.R said...

உங்கள் கவிதை மனதுக்கு இதம்.
எனது கல்லூரி "கவி"(தை)க்காலத்தை நினைவுப் படுத்துகிறது .

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.

சரியாகச் சொன்னீர்கள்.
கரியமில வாயுக்களை மட்டுமே சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்
என்பது தான் உண்மை.
தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கருன்

தங்களின் வரவுக்கும் இனிய
கருத்துரைக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

சொந்த நிலமில்லை
சொகுசான வாழ்க்கையில்லை
ஒண்டு குடிசையில
உறவுகள் அத்தனையும்
நிம்மதியா வாழ்ந்திருந்தோம்!!

அழகு மண் வாசம்! அனுபவித்தேன், இன்று தான் தளம் கண்டேன், வாழ்த்துக்கள் !! .

நிரூபன் said...

வணக்கம் பாஸ், கிராமிய மண் வாசனை தவழ்ந்து தாலாட்டிட, நாற்றுக்கள் தென்றலாய் எமைத் தழுவிடும் வண்ணம் அற்புதமான ஒரு கவிதையினை சந்தம் கலந்து, பாடலாகவும் பாடும் வண்ண்ம் படைத்திருக்கிறீங்க.

இறுதிப் பந்திகள், தம் பிள்ளைகளுக்காக சேற்றில் கால் வைக்கும் பெற்றோரின் நிலையினைச் சொல்லுகையில், உண்மையிலே, அவர்களின் மன ஏக்கங்களைத் தரிசித்தது போன்ற உணர்வினைப் பெற்றுக் கொண்டேன் சகோ.

நிரூபன் said...

சகோ; தமிழ் மண ஓட்டுப் பட்டையினைக் கீழே வைத்தால், அனைத்துப் பதிவர்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன். காரணம், மேலே உள்ளதால், ஏனைய திரட்டிகளில் ஓட்டளித்த பின்னர், தமிழ் மணத்தைப் பதிவர்கள் மறந்து போக வாய்ப்புகக்ள் உள்ளன.

இந்த இணைப்பில் சென்று தமிழ் மண ஓட்டுப் பட்டையினைக் கீழே கொண்டு வருவது பற்றி அறிந்து கொள்ளலாம் சகோ.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

Unknown said...

கிராமம் பற்றிச் சொல்லியிருப்பது மிக அருமை, அழகு! அப்படி ஒரு இடத்திற்குப் போகவேண்டும் போல தோன்றுகிறது!

vetha (kovaikkavi) said...

''...பச்சைநிலம் பார்க்கவில்ல
வாசதெளிச்சு கோலம்போட
ஒருசதுர நிலம்கூட தெரியவில்ல!
நான்போறேன் என் ஊரு..''
கிராமத்து அழகு விவரணம் நல்லது....
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

மாலதி said...

ஊரோரம் தோப்பிருக்கும்
தோப்பெல்லாம் மரமிருக்கும்!
வானந்தொட வளர்ந்திருக்கும்
வேப்பமரக் கிளையிலதான்
கயத்தாலே ஊஞ்சல்கட்டி
வக்கனையா ஆடயில//
மண்வாசனை மிகுந்த கவிதை,,
அருமை..

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நடாசிவா

தங்களின் வரவுக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வசந்தமண்டபத்தின்
வாசல் வாருங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்
தங்களின் விரிவான மற்றும்
தாத்ரூபமான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறியதுபோல் தமிழ்மணம் ஒட்டுப்பட்டையை
பதிவுக்கு கீழே கொண்டு வருகிறேன்.
தங்களின் மேலதிக அன்புரைக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜீ

வணக்கம்
தங்களின் வரவுக்கும் இனிய கருத்துரைக்கும்
மிக்க நன்றி. வாருங்கள் இருவரும் கைகோர்த்து
சிலபல கிராமங்கள் சுற்றிவருவோம்.
தொடர்ந்து வசந்தமண்டப தென்றல் சுவாசிக்க
வாருங்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கவிதை வேதா.இலங்காதிலகம்

தங்களின் வரவுக்கும் இனிய கருத்துரைக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி மாலதி

தங்களின் வரவுக்கும் இனிய
கருத்துரைக்கும் மிக்க நன்றி.

vidivelli said...

அருமை அருமை படங்களோடு கவிதையும் அருமையோ அருமை..
நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்..

Anonymous said...

கிராமிய வாசம் கமழ்கிறது கவிதையில்... இன்றைய யதார்த்தம்... இடையிடையே படங்கள். கவிதையை இன்னும் ஒரு படி அழகு கூட்டியிருக்கின்றன... வாழ்த்துக்கள்


நேரம் இருப்பின் வருகை புரியவும் http://nisiyas.blogspot.com/

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி
தங்களின் வாழ்த்துக்கும்
இனிய கருத்துக்கும் மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் எம்.ஆர்.

இதோ உடனே ஓடி வருகிறேன்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஷீ -நிஷ்

தங்களின் வருகைக்கும் இனிய
கருத்துக்கும் மிக்க நன்றி.
நிச்சயம் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன்.

நீங்களும் தொடர்ந்து வாருங்கள்.
நன்றி.

kupps said...

இயற்கையை விட்டு விலகிச்சென்று கொண்டிருக்கும் தற்கால மனிதனுக்கு ஒரு சவுக்கடி தங்கள் கவிதை.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி
தங்களின் வாழ்த்துக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி.

SURYAJEEVA said...

தோழரே நலமா? நான் இங்கு நலமே, விவசாயம் சம்பந்தப்பட்ட பாடல் வேண்டும் என்று பள்ளி மாணவன் ஒருவர் வந்தார், எனக்கு உடனே நினைவுக்கு வந்தது உங்கள் வலைப்பூ தான்... இந்த பாடலை பிரதி எடுத்த்து அந்த மாணவரிடம் கொடுத்த்து உள்ளேன்... நன்றி

Post a Comment