Powered By Blogger

Wednesday 13 July 2011

உன்னால் தானன்றோ?!!





விண்ணேறும்  துணிவு 
வியாக்கியானத் தெளிவு 
சான்றோர்முன் பணிவு
அழகுடனே வந்ததெல்லாம்
உன்னால் தானன்றோ?!!

சிந்தனையில் சிறந்தவனாய்
விவேகத்தில் வீரனாய்
பொறுமையில் சிகரமாய்
இன்றுநான் இருப்பதெல்லாம்
உன்னால் தானன்றோ?!!





பன்மொழி பலவேனும்
பாங்குடனே பேசிடவே
வாய்பழகி வந்தாலும்
இன்மொழியாம் தமிழை - நான்
என்றென்றம் நேசிப்பது
உன்னால் தானன்றோ?!!

எண்ணெழுத்து என்பதெல்லாம்
ஏற்றமாக எடுத்துரைத்து
அரிச்சுவடி ஆரம்பித்து
அடிப்படையாய் அத்தனையும்
குறைவின்றி புகட்டிவைத்தாய்!!




தடுமாறிய போதெல்லாம்
விரல் பிடித்து வழிநடத்தி
தோழனாய் தோள்கொடுத்து
வாழ்வினில் சுவடுகளை
தடம்பதித்து சென்றாய்!!

குழந்தைத்தனம் மாறாமல்
குறும்புகள் செய்தபோதும்  
புன்சிரிப்பு மாறாமல்
சிறப்பாக சீர்தூக்கி
குறைகள் யாவையுமே
நிறைவாய் மாற்றினாய்!





தற்குறியாய் இருந்தவனை
தரணியில் மனிதனாய்
திறனாய் தனித்து நிற்க
தரமேற்றி வைத்ததெல்லாம்
ஏற்றமுடை ஏந்தலாம்
அறிவுடை ஆசானே நீதானன்றோ!!

உன்னுருவைக் கண்டாலே
கசந்த தினமுண்டு - இன்றோ
என்னுருவைக் காண்கையில்
என்னிலையை நினைக்கையில்
ஏங்குகிறது என் நெஞ்சம்
கல்விக் களஞ்சியமே - உனை
காண விழைகிறேன்
காட்சியொன்று கிடைக்காதா?!!!

அறிவில்லாதவனையும்
அறிவில் ஆதவனாய்
படைக்கும் பிரம்மனே
பாரினில்  உனக்கீடு
எவரேனும் இல்லையிங்கு!!


அன்பன்
மகேந்திரன்

21 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை..

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற
மகற்கு..

இல்லையா ?

அறிவு போதித்த ஆசானை மறப்பது
மன்னிக்க முடியாத குற்றம்.

குருவே சிவம் என கூறினன் நந்தி.

நன்றி.


http://sivaayasivaa.blogspot.com

கூடல் பாலா said...

மிகவும் அருமை ....

Anonymous said...

சொல்லிக்கொடுத்த ஆசிரியரை
நினைத்துப் பார்ப்பதே
பெரிய விஷயம்
அதிலும்
அவரை போற்றிப் பாடுவது
என்பது மிகப்பெரிய விஷயம்

வாழ்த்துக்கள்

தமிழ்தேவன்

நிரூபன் said...

ஆசிரியப் பெருந்தகையின் சிறப்புக்களையும், அவரால் அடைந்த பேற்றினையும் மீட்டிப் பார்க்கும் அருமையான கவிதை சகோ.

இக் கவிதை ஒரு மாணவன் ஆசிரியருக்கு ஆற்றும் நன்றிக் கடனை, நினைவு மறக்காத இயல்பினை வெளிப்படுத்தி நிற்கிறது.

vidivelli said...

உங்கள் கவிதையின் வரிகள் அத்தனையும் அருமை...
அ" கற்பித்த கடவுளை மறக்கக் கூடாதென்று சொல்வார்கள்....
உங்கள் நன்றியுணர்வும் ஏக்கமும் புரிகிறது கவிதையில்...





/உன்னுருவைக் கண்டாலே
கசந்த தினமுண்டு - இன்றோ
என்னுருவைக் காண்கையில்
என்னிலையை நினைக்கையில்
ஏங்குகிறது என் நெஞ்சம் /


படிக்கும் போது எப்படா இந்த படிப்பு முடியும் என்று சின்னனில் ஏங்கிய காலமுண்டு....

ஆனால் வளர்ந்த பின் படிப்பு முடியக்கூடாதென்றும் இருந்தது ..
அந்த வாழ்க்கை எப்போதும் வராது,,,

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன்

உண்மைதான் நண்பரே, செய்நன்றி மரப்பவற்கு
உய்வில்லை என்பது நிதர்சனமான உண்மை.
அதிலும் நமக்கு கல்வியெனும் பெருஞ்செல்வம்
அளித்தவரை மறக்கவே கூடாது.

தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் கூடல்பாலா

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அருமை நண்பரே,

அழகிய கவிதை படைப்பு.

தென்னரசு

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தமிழ்தேவன்

தங்களின் வாழ்த்துக்கும்
மணியான கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் நிரூபன்

சரியாகச் சொன்னீர்கள்
எம்மை ஏற்றுவித்த ஆசிரியருக்கே
இந்த கவிதை சமர்ப்பணம்.

மகேந்திரன் said...

அன்பு நட்பே விடிவெள்ளி

பரீட்சார்த்தமான கருத்துரைத்தீர்கள்,
இன்று அந்த வகுப்பறையில் உட்கார்ந்து படிக்க மாட்டோமா
என்ற எண்ணம் தலைதூக்குவது என்னவோ உண்மைதான்.

தங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தென்னரசு

தங்களின் இனிய கருத்துக்கு
மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அறிவில்லாதவனையும்
அறிவில் ஆதவனாய்
படைக்கும் பிரம்மனே
பாரினில் உனக்கீடு
எவரேனும் இல்லையிங்கு!!//

நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுகள்.

மகேந்திரன் said...

அன்புத் தோழி இராஜராஜேஸ்வரி

என் தாயின் பெயர்கொண்ட நீங்கள்
இங்கு பொற்பாதம் பதித்தமைக்கும்
இனிய கருத்திட்டமைக்கும்
மிக்க நன்றி.

kupps said...

ஓரு ஆசிரியர் என்பவர் எவ்வாரு எல்லாம் இருக்கமுடியும் என்பதனை அருமையாக எடுத்துரைக்கிரது உன்க்கல் கவிதை.Good Luck.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் குப்புசாமி

தங்களின் வளமான கருத்துக்கு
மிக்க நன்றி.

M.R said...

அருமை ,கவிதையும் கருத்தும் .

கடந்து வந்த பாதையை யாரும் திரும்பி பார்ப்பதில்லை ,
தாங்கள் பார்த்ததோடு வழி நடத்தியவரை பார்க்க ஏங்குவது அருமை
அந்த நினைவே குருவிற்கு காணிக்கை

kunthavai said...

நல்ல ஆசிரியர்கள் ஒரு சிறந்த மாணவனை மட்டுமல்ல..ஒரு சிறந்த மனிதனையும் அவரால் தான் உருவாக்க முடியும் என்பது வெறும் புகழ்ச்சியுரை மட்டுமல்ல.
முற்றிலும் உண்மை.
அதுவும் சிறு குழந்தைகளின் ஆசான்கள் தேவனின் தூதர்களாக மிளிர முடியும்.
நம் சிறு வயது ஆசிரியர்கள்,(கல்லூரி,மேல்நிலை ஆசிரியர்களைவிட) இன்னும் நமது ஆதர்ச ஆசிரியர்களாக இருப்பதை நாமும் உணர்ந்திருக்கிறோமே !
அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு கவிதை .நன்றி தோழரே !
- அனு.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஸ்

இங்கு தங்கள் பொற்பாதம் பதித்தமைக்கும்
மேலான கருத்துக்கும்
மிக்க நன்றி.

மகேந்திரன் said...

அன்புத் தோழி அனு

சரியா சொன்னீங்க, இன்னும் நம் ஆரம்ப பாடசாலை
ஆசிரியரை மறக்க முடியவில்ல என்பது நிதர்சனமான உண்மை.
தங்களின் மேன்மைமிகு கருத்துக்கு மிக்க நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் மகேந்திரன்

ஆசிரியப் பணி அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி - என்ற வாக்கிற்கிணங்க பெரும்பாலானா ஆசிரியர்கள் ஆசிரியப்பணியினை அறப்பணியாகவே செய்து வருகின்றனர். அவர்களை மாணவச் செல்வங்கள் முன்மாதிரியாக வைத்து வளர்வார்கள். அழகான கருத்துகள் நிறைந்த அருமையான கவிதை. மிக மிக நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment