Powered By Blogger

Wednesday 1 June 2011

உன் இனம் வாழச் செய்துவிடு!!




வெப்பம் கொடிது - அதன்
வேகம் கொடிது
தகதகக்கும் தணல் போல - அதன்
தாக்கம் கொடிது!

உச்சியில்  ஊடுருவி
உள்ளங்கால் வரையிலும்
வெப்பக்கதிர்கள் பாய்ச்சும்
வெய்யில் கொடிது!

மேனியின் நீர்மங்களை
உறிஞ்சி நிர்
மூலமாக்கி - சிறு
புழுவைப்போல் சுருட்டிப்போடும்
வேனல் கொடிது!






சிறு நிழல் கண்டால்
பேரானந்தம் ஏகுமே
மரநிழல் கண்டாலோ?!!!
மறுஜென்மம் ஏகுமே!

வெய்யோனின் வீச்சுக்களை
வீணடித்து - தன்னுள்
உறைந்தோரை உயிர்ப்பிக்கும்
மரநிழல் எங்கே??!!

நச்சுவாயு தனையேற்று
நல்வழியில் பயணித்து
பிராணவாயு வெளியேற்றும்
மரங்களெல்லாம் எங்கே??!!

திரும்பிய திசையெங்கும்
பாலை மட்டும் பட்டதே!
தாய்மடியின் சூடுதணிக்க
ஒரு மகவு இல்லையோ?!!









துகிலுரியப்பட்டதா?? - இல்லை
தீயினால் கொளுத்தப்பட்டதா??
எம்பூமித்தாயின் மானம்காக்க - ஓர்
பச்சைப்பட்டு நெய்வீரோ?!!

மரமில்லை என்றால்
இங்கு மழையில்லை நண்பா!!
மழையில்லை என்றால் இங்கு
நாமில்லை நண்பா!!

மரம் வெட்டுபவன்
சிரம் வெட்டிவிடு - இல்லையேல்
நீடூழி வாழ நிரந்தரமாய்
பாலையில் விட்டுவிடு!!!!

இன்றே ஒருகன்றை நட்டுவிடு!
உன் இனம் வாழச் செய்துவிடு!!


அன்பன்

மகேந்திரன்

13 comments:

Natarajan said...

Really super
By
Natarajan

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மகேந்திரன்,

//மரம் வெட்டுபவன்
சிரம் வெட்டிவிடு - இல்லையேல்
நீடூழி வாழ நிரந்தரமாய்
பாலையில் விட்டுவிடு!!!!‘//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் தோழரே..
சிரத்தை வெட்டுவது கூட ஒரு நிமிட துன்பம்..

ஆனால் வஞ்சப் புகழ்ச்சி போல..
மரம் வெட்டுபவனை,

" நீடூழி வாழ நிரந்தரமாய்
பாலையில் விட்டுவிடு "

என்று சொன்னீர்கள் பாருங்கள்.. அருமை அருமை..

ஆம் தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றம் குறையும்...

ஆனால்..
நம் நாட்டில் ?

எல்லாம் சிவன் செயல் !

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் மகேந்திரன்,

மன்னிக்க வேண்டும்..
இன்ட்லியில் ஓட்டு போடப் போனேன்.

நீங்கள் பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லை போல..
அதனால், அது என்னடா என்றால் எனது பெயரில் அங்கு பதிவாகிவிட்டது...

தவறுக்கு வருந்துகிறேன் .. தோழரே..
பொறுத்தருளுங்கள்..

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post.html

மகேந்திரன் said...

அன்பு நண்பன் தில்லைநடராஜன்
வணக்கம்
இங்கு வருகை தந்து இனிய கருத்துரைத்தமைக்கு
மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தரவும்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ஜானகிராமன் அவர்களே,
நேரமின்மை காரணமாகத்தான் என்னால்
இன்ட்லி யில் இணைப்பு கொடுக்க முடியவில்லை
நீங்கள் அதை செய்ததற்கு நான் தான்
உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
வருத்தம் வேண்டாம் தோழரே.

படைப்பின் மீதான தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறியது மிகவும் சரியே,
தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.
நம் நாடு தான் ஜனநாயக நாடாச்சே
தண்டனைகள் மெதுவாத்தான் நடக்கும்...........


அன்பன்

மகேந்திரன்

மகேந்திரன் said...

அன்பு நண்பர் தம்பி.கூர்மதியான் அவர்களே
என்னை வலைச்சரத்தில் இணைத்தமைக்கு
மிக்க நன்றி.
நேரம் கிடைக்கும் போது நிச்சயம் சென்று பார்க்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

டானியல் செல்லையா said...

அன்புடையீர் தங்களின் வலைப்பதிவு மிகுந்த பரிசீலனைக்குப் பின், தரம்வாய்ந்த ஒன்று என்பதால் வலைச்சரம் தானியங்கி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. தயையுடன் எமது இணையப்பட்டையை தங்களின் வலைத்தளத்தில் இணைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வலைச்சரத்துடன் தங்கள் பதிவுகள் சிறப்புற வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

வலைச்சரம் நிர்வாகக் குழு.

மகேந்திரன் said...

அன்புடைய வலைச்சரம் நிர்வாகக்குழுவினருக்கு,
என்னுடைய வலைப்பதிவை அங்கீகரித்ததற்காக
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்பன்
மகேந்திரன்

kunthavai said...

முதலில் என் வாழ்த்துக்கள் ...வலைச்சரத்தில் தாங்கள் இணைந்தமைக்கு :)

அடுத்து இந்த கவிதைக்கு !
’’துகிலுரியப்பட்டதா?? - இல்லை
தீயினால் கொளுத்தப்பட்டதா??
எம்பூமித்தாயின் மானம்காக்க - ஓர்
பச்சைப்பட்டு நெய்வீரோ?!!’’

சாட்டையடி தோழரே..
வெயில் தாங்கலை..இந்த முறை வெயில் அதிகம்..என்று ஒவ்வொரு முறையும் அங்கலாய்க்கும் அதே நாம்தான்....இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டுவதில் முதன்மையாய் இருப்போம் !
எங்கே போயிற்று நம் அறிவு..
அறிவு இருக்கட்டும்..நல்ல மனது வேண்டும் முதலில்..நாம் செய்யும் நன்மையும் தீமையும் நம் சந்ததியைத் தாக்கும் செயல் என்ற சிற்றறிவு கூட இல்லையா ?
நன்மை செய்யாமல் போனாலும் தீமையாவது செய்யாமல் இருக்கலாம் இல்லையா ?
ஒரு மரம் வெட்டினால் ஒரு மரம் நட வேண்டும்.
இதன் முக்கியத்துவம் நம் ஒவ்வொருவரும் அறியவேண்டும்..
அதை உணரவேண்டும்..
சோலையாக இல்லாமல் போனாலும், பாலையாக ஆக்கி விடாமல் செய்வோம் நம் பூமித்தாயை !

- அனு.

மகேந்திரன் said...

அருமையாக கருத்துரைத்த நேசத் தோழி அனு,
வலைச்சரம் இந்த வலைப்பதிவை ஏற்று வெளியிட்டதை
எனக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.
உங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள் தோழி.
பசுமைத்தாயகம் என்ற போர்வையில் இருந்த ஒரு அரசியல் கட்சி
மரங்களை வெட்டி தங்களின் போராட்டத்தை வெளிப்படுத்திய காலம் உண்டு.
நான் இப்போது இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போகும் பாதையெல்லாம் மரங்கள் வளர்க்க
என்ன பாடு படுகிறார்கள் அதற்கு எப்படியெல்லாம் மெனக்கிடுகிரார்கள் என்று
கண்ணாரக் காண்கிறேன்.
இங்கு வைத்த இடத்தில் வந்துவிடும் நிலைமை இருந்தும் நாம் வெட்டுவதிலேயே
கவனம் செலுத்துகிறோம்.
நீங்கள் கூறியதுபோல நம் சந்ததிகளை மனதில் கொண்டு
குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது
வைத்துவிட்டு செல்லவேண்டும்.
முயற்சி செய்வோம்.

அன்பன்
மகேந்திரன்.

akilan said...

மரக்கன்று ஒன்று நட்டுவிட்டேன் நண்பா
உங்கள் படைப்பை படித்த பின்னர்
நன்றி

மகேந்திரன் said...

அன்பு நண்பர் அகிலன்
தங்களின் மனிதநேயத்துக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.

Post a Comment