விழிகள் இரண்டும்
வியர்த்துப் போகின்றன
வயங்கு நகைபூக்கும்
விழுநிதியாம் உன்னழகை
வியந்து நோக்கையிலே!!
இயக்கமற்றுப் போன
இதயத்தின் செல்கள் கூட
இயல்பு நிலைமாறியதே - உன்
இறும்பூது வடிவினை
இவணம் காண்கையிலே!!
செயல் பூர்த்தி செய்யும்
சுரைக் கரங்கள் இங்கே - உன்
சிலம்பும் அழகு கண்டு
சித்தம் தழுவிட
சிந்தையில் துடிக்கின்றதே!!
வலந்த வெப்பக்காற்றினை
விருப்பமின்றி சுவாசிக்கும்
விரிந்த நாசியிங்கே - உன்
வீறுசால் சித்திரம் கண்டு
வெண்குளிரென நினைத்ததுவே!!
குளிர்காற்றின் வேகத்தில்
கொள்ளியின் இதம் தேடும்
குருதியின் தன்மை கூட - உன்
கிளர்மிளிர் வடிவம் கண்டு
கொதிநிலை ஏகியதே!!
அஞர் என்னைத் தீண்டிடினும்
ஆரணங்கே உனைக்கண்டால்
அரந்தை கைவிடுத்து - என்றும்
அளவிலாத ஆனந்தமதை
அவயமெங்கும் உணர்கின்றேன்!!
உறுப்புகள் சோர்ந்திருக்கும்
உலர்ந்த பொழுதினிலே - உன்
உருவகம் கண்டாலோ
உக்க நிலையெனக்கு
உச்சியில் நிலைகொள்ளும்!!
கணம் தோறும் கணம் தோறும்
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால் கசிந்துருகுகிறேன்!!
கவின்மிகு அழகுருவாய்
களிநடமிடும் மயிலுனை
கண்ணுற்று நோக்கிடுகையில்
காதலால் கசிந்துருகுகிறேன்!!
முகிழ்ந்த மலராய்
மகிழ்ந்து விரிகின்றேன்
மங்காத புகழ்கொண்ட
மதுரத்தேன் சுவைகொண்ட
மாதவமே உனைக்கண்டு!!
மகிழ்ந்து விரிகின்றேன்
மங்காத புகழ்கொண்ட
மதுரத்தேன் சுவைகொண்ட
மாதவமே உனைக்கண்டு!!
கனத்த வில்லினின்று - இன்பக்
கணையொன்று பாய்ந்ததுபோல்
களிநகை புரிகின்றேன்
கன்னித்தழிழே உனைக்கண்டு
கணமொன்று மீதமின்றி - உன்மேல்
காதலால் கசிந்துருகுகிறேன்!!!
சொல்லுக்கான பொருள் விளக்கம்:
==============================
==============================
விழுநிதி -------------------- சிறந்த செல்வம்
வயங்கு --------------------- ஒளியுடைய
இறும்பூது ------------------ வியப்பு (அல்லது) அதிசயம்
இவணம் ------------------- இங்கே
சுரை ------------------------ வலிவுடைய
சிலம்பும் ------------------ ஆரவாரிக்கும்
கடுங்கண் ----------------- கொடூரமான
கடுங்கண் ----------------- கொடூரமான
வலந்த -------------------- பரவிய
வீறுசால் ------------------- மதிப்பிற்கு உரிய
கிளர்மிளிர் --------------- மிகுந்த ஒளியுடைய
அஞர் ------------------------ மனவருத்தம்
அரந்தை ------------------- வருந்துதல்
உக்க ------------------------ தெளிவு
அன்பன்
மகேந்திரன்
மகேந்திரன்